You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.
அவர்கள் பயணித்த ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5.37 மணிக்கு), சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. இது ஸ்ப்லாஷ்டவுன் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ப்லாஷ்டவுன் நிகழ்வு மூலம் கடலில் விழுந்த ஓரியன் விண்கலம் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா (USS John P Murtha) என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படுகிறது. இது சான் டியாகோவைத் தளமாகக் கொண்ட ஒரு போர்க்கப்பலாகும்.
ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் ஓரியன் விண்கலத்திலிருந்து ஒவ்வொருவராக படகில் மீட்கப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புக் கப்பலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
4 விண்வெளி வீரர்களும் நலம்
ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் சென்று வந்த 4 விண்வெளி வீரர்களும் நலமாக இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
ஓரியன் விண்கலத்திற்குள் சென்று முதல் கட்ட பரிசோதனைகளை செய்த மருத்துவ அதிகாரி, குழுவின் நான்கு உறுப்பினர்களும் 'பச்சை' நிலையில் (பாதுகாப்பாக) இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
"பச்சை என்பது, அவர்கள் உடல்ரீதியாக மிகவும் நலமாக உணர்கிறார்கள் என்பதையே குறிக்குமே தவிர, அது அவர்களின் தோல் நிறத்தைக் குறிப்பதல்ல," என்று நாசா சார்பில் பேசிய மேகன் குரூஸ் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இந்த விண்வெளி வீரர்கள் விரைவில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா (USS John P Murtha) என்ற கப்பல் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதுமே நேராக நடக்க முடியாது - ஏன்?
ஓரியன் விண்கலத்தில் இருந்த ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் ஒவ்வொருவராக கடற்படை வீரர்களின் படகில் ஏற்றப்பட்டனர். பின்னர், அந்த படகில் இருந்த வீரர்கள் அமெரிக்க கடற்படையின் ஒரு ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா (USS John P Murtha) கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆர்டெமிஸ்-2 குழுவின் நான்கு உறுப்பினர்களும் தற்போது யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா கப்பலில் உள்ளனர். இதில், ஓரியன் விண்கலத்தை ஏற்றிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய சரக்கு அறை உள்ளது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளது. இந்த கப்பலிலேயே மருத்துவ வசதிகளும் உள்ளன. மீட்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் உடலின் சமநிலை அமைப்பு ஆகியவை மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும்.
விண்வெளி வீரர்களின் காதின் உள்பகுதியில் உள்ள உடலின் சமநிலை பராமரிப்பு அமைப்பு விண்வெளியில் புவியீர்ப்பு அற்ற நிலைக்குப் பழகிவிடும். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வரை பெரும்பாலும் தலைசுற்றலையும் தடுமாற்றத்தையும் உணர்கிறார்கள்.
இதுகுறித்து பிபிசி அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷிடம் பேசிய பிரிட்டனின் முதல் விண்வெளி வீரரான ஹெலன் ஷார்மன், விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய உடனேயே நேராக நடக்க முடியாது என்றார். அவரது கூற்றுப்படி, ஒரு காலைத் தூக்குவதற்கு உடலின் மற்ற பாகங்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவரது மூளை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு விரலை அசைப்பது கூட ஆச்சரியப்படும் அளவுக்குக் கனமாக இருக்கும் என்று அவர் கூறினார். அடுத்து வரும் நாட்களில், ஆர்டெமிஸ்-2 குழுவினர் ஹூஸ்டனுக்குத் திரும்பிச் செல்வார்கள். அங்கு, இந்தத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட உடலியல் மற்றும் செயல்பாட்டுத் தரவுகள் உன்னிப்பாக ஆராயப்படும்.
பூமியின் காந்தக் கவசத்திற்கு அப்பால் உள்ள ஆழ்விண்வெளிக் கதிர்வீச்சுச் சூழலுக்கு மனித உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது, விஞ்ஞானிகள் பதில் தேடும் முக்கியக் கேள்விகளில் ஒன்றாகும்.
அப்போலோவை தாண்டி சாதித்த ஆர்டிமிஸ்2 - நாசா
ஆர்டெமிஸ்-2 குழுவினர் பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பிறகு நாசா அசோசியேட் நிர்வாகி அமித் ஷத்ரியா உள்ளிட்ட குழுவினர் நாசா ஜான்சன் விண்வெளி நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமித் ஷத்ரியா, 'இது ஒன்றும் அதிர்ஷ்டத்தால் விளைந்தது அல்ல. ஆயிரம் பேர் இதற்குப் பின்னால் பணிபுரிகின்றனர். இதுவரை செய்ததை விட இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அவர்கள் தொடங்கியதை நாங்கள் முடிப்போம். நிலவுக்குச் சென்று கொடியை நட்டுவிட்டு திரும்புதாக அல்லாமல்,, அங்கேயே தங்கிட' என்றார்.
"நிலவுக்குச் செல்லும் முன்னதாகவே, விண்வெளியில் நீண்ட காலத்திற்கு வாழ்ந்து பணியாற்றுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளவே நாசா தொடக்கத்தில் விரும்பியது; ஆனால், நாம் அறிந்தபடி, ஐந்து தசாப்தங்களுக்கு முந்தைய புவிசார் அரசியல் சூழலின் காரணமாக அந்த இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து மனிதர்கள் தங்கியிருந்து பணியாற்றியதன் மூலம், நாசா தற்போது அந்த அடிப்படைத் தளத்தை வெற்றிகரமாக அமைத்துவிட்டது. ஆர்டெமிஸ்' (Artemis) திட்டங்களின் வாயிலாக, அவர்கள் தங்கள் கவனத்தை மீண்டும் நிலவின் பக்கம் திருப்பியுள்ளனர். வரலாற்றின் விசித்திரம் என்னவென்றால், அந்தச் சாதனையை நிறைவேற்றுவதற்கு நமக்கு இவ்வளவு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது" என்றார் அமித் ஷத்ரியா.
ஆர்டெமிஸ்-2 குழுவின் சாதனைப் பயணம்
ஓரியன் விண்கலம் மூலம் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியதன் மூலம் ஆர்டெமிஸ்-2 குழுவினர் நிலவிற்குச் சென்று திரும்பும் 6,94,481 மைல் (11,17,659 கி.மீ) தொலைவிலான பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவை நெருங்கிப் பறந்தபோது, இக்கலமானது பூமியிலிருந்து தனது அதிகபட்சத் தொலைவான 4,06,771 கிலோமீட்டரை (2,52,756 மைல்கள்) எட்டியது. இதன் மூலம், பூமியைத் தாண்டி விண்வெளியில் அதிகபட்ச தொலைவை எட்டிய மனிதர்கள் என்ற புதிய சாதனையை ஆர்டெமிஸ்-2 குழுவினர் படைத்துள்ளனர்.
மொத்தகால அளவு 9 நாளுக்கும் சற்று அதிகம்
ஆர்டெமிஸ் 2 குழுவின் நிலவுப் பயணத்தின் ஒட்டுமொத்த கால அளவு 9 நாட்களுக்கும் சற்று அதிகம் ஆகும்.
ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் ஸ்ப்லாஷ்டவுன் முறையில் நீரின் மேற்பரப்பை தொட்ட நேரம் இந்திய நேரப்படி காலை சுமார் 5.37 என்று அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், ஆர்டெமிஸ்2 திட்டத்தின் மொத்த கால அளவு 9 நாட்கள், ஒரு மணி நேரம், 32 நிமிடங்கள் மற்றும் 15 நொடிகள் ஆகும்.
6 நிமிடங்கள் தொடர்பை இழந்த விண்கலம்
ஆர்டெமிஸ்-2 குழுவினர் பயணித்த ஓரியன் விண்கலம் பூமிக்குத் திரும்புகையில் சுமார் 6 நிமிடங்கள் தொடர்பை இழந்தது. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பிபிசி அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ் பின்வருமாறு விளக்குகிறார்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 400,000 அடி உயரத்தில், ஹவாய்க்குத் தென்கிழக்கே உள்ள வளிமண்டலத்தை தொட்டதுமே ஓரியன் விண்கலம் தகவல் தொடர்பை இழந்தது. .
அந்த விண்கலம் மணிக்கு சுமார் 24,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்தது. அந்த உயரத்தில் காற்று மிகவும் மெல்லியதாக இருப்பதால், அதனால் போதுமான வேகத்தில் விலகிச் செல்ல முடியவில்லை. அது சுருங்கி, வெப்பமடைந்து, அயனியாகிறது — அதன் மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்கள் பிரிக்கப்பட்டு, விண்கலத்தின் வெப்பக் கவசத்தைச் சுற்றி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒரு பிளாஸ்மாவை உருவாக்கும். .
அந்தக் கவசத்தில் மேல்பகுதியில் உள்ள வெப்பநிலை இப்போது 5,000°F-ஐ வரை எட்டும். நோக்கி உயர்ந்தது — அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் "சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏறக்குறைய பாதி" என்ற சொற்றொடர், இந்த அனுபவம் எவ்வளவு அபாயகரமானது மற்றும் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை மிகச் சரியாக விளக்குகிறது.
திரும்பி வரும் எந்தவொரு விண்கலத்திற்கும் நிகழக்கூடிய மிகவும் ஆபத்தான நிகழ்வு இது.
அந்த பிளாஸ்மா குமிழி வெறும் வெப்பத்தை மட்டும் உருவாக்குவதில்லை. அது உள்ளேயும் வெளியேயும் செல்லும் ஒவ்வொரு வானொலி அலைவரிசையையும் தடுக்கிறது. ஓரியனிடமிருந்து எந்த சமிக்ஞையும் இல்லை. குரல் இல்லை. தொலை அளவீடுகள் இல்லை. ஹூஸ்டனில் உள்ள திட்டக் கட்டுப்பாட்டாளர்களால் எதையும் பார்க்க முடியவில்லை; அந்த நெருப்புப் பந்திற்குள் இருக்கும் நான்கு பேருக்கு என்ன நடக்கிறது என்பதை, இயற்பியல் மற்றும் முன்கூட்டிய திட்டமிடலைக் கொண்டு மட்டுமே அவர்களால் கணக்கிட முடியும்.
வளிமண்டலம் அடுக்குகளாக வருகிறது, மேலும் அடர்த்தியான வாயுப் பகுதிகள் அந்த விண்கலத்தை நடுங்கவும் தள்ளாடவும் செய்கின்றன. ஆறு நிமிடங்களுக்கு, தரையிலிருந்து செய்வதற்கு எதுவும் இல்லை.
ஆர்டெமிஸ் குழுவினர் யார் யார்?
- குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன். அவர் கேப்டன். இறுதி முடிவுகளை எடுத்ததுடன், குழுவை ஒருங்கிணைத்தார். பாதுகாப்புக்கு பொறுப்பானவர்
- விக்டர் க்ளோவர் பைலட். விண்கலத்தை இயக்கும் பொறுப்பு இவருடையதாக இருந்தது. குறிப்பாக, பூமியின் பாதையிலிருந்து சந்திர நோக்கி தள்ளும் முக்கிய ஏவூர்தி இயக்கம் அவரால் கையாளப்பட்டது. சில சோதனைகளில் அவர் ஓரியான் விண்கலத்தை தானே ஒட்டி சோதனை செய்தார்.
- கிறிஸ்டினா கோக் மிஷன் சிறப்புப் பணியாளர். அவர் உடல்நலச் சோதனைகள், உயிர் ஆதரவு அமைப்புகளின் கண்காணிப்பு, சந்திரனின் புகைப்படங்கள், மேற்பரப்புக் குறிப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். நீண்டகால விண்வெளிப் பயண அனுபவம் அவருக்கு உதவும்.
- ஜெரமி ஹான்சன் மற்றொரு சிறப்புப் பணியாளர். ஏவுதலுக்குப் பிறகு தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, அவசர உபகரணங்கள், விண்கல கருவிகளின் செயல்பாடு குறித்த பரிசோதனைகள் ஆகியவற்றில் பங்கெடுத்தார். அவர் கனடிய விண்வெளித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு