பைசா கோபுரம் ஒரு பக்கம் சாய்ந்திருந்தாலும் கீழே விழாமல் இருப்பதன் ரகசியம்

பட மூலாதாரம், Sol de Zuasnabar Brebbia vía Getty Images
- எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பைசா நகர சாய்ந்த கோபுரம் இத்தாலியில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
உலகில், ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும் ஒரே கட்டடம் அது மட்டுமே அல்ல.
நெதர்லாந்தின் நடனமாடும் வீடுகள் (Dancing Houses) முதல் சீனாவின் டைகர் ஹில் பகோடா வரை, உலகம் முழுவதுமே சற்று சாய்ந்த நிலையில் உள்ள நினைவுச்சின்னங்கள் உள்ளன.
ஆனால் அவை ஏன் சாய்ந்த நிலையில் உள்ளன? அதேசமயம், அப்படிச் சாய்வதால் அவை கட்டாயம் கீழே விழுந்துவிடும் என்று ஏன் சொல்லமுடியாது?
சில கட்டடங்கள் ஏன் சாய்ந்துள்ளன?
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த இணைப் பேராசிரியர் மேண்டி கோர்ஃப் கருத்துப்படி, கட்டமைப்புகள் ஒரு பக்கமாகச் சாய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.
சில சூழல்களில், நெதர்லாந்தின் நடனமாடும் வீடுகளைப் போல, அவை கட்டப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அடித்தளங்களின் வகையே இதற்குக் காரணம்.
"ஆம்ஸ்டர்டாமின் மையப்பகுதியில், பெரும்பாலான வீடுகள் மரத்தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளன," என்கிறார் கோர்ஃப்.

பட மூலாதாரம், Karl Hendon vía Getty Images
கட்டடங்களின் சுவர்கள் மற்றும் முகப்புகளுக்கு அடியில் மரத்தூண்கள் ஜோடி ஜோடியாகப் பொருத்தப்படுகின்றன என்று அவர் விளக்குகிறார்.
அவை மென்மையான களிமண், கரி அல்லது மணலால் ஆன நிலப்பரப்பில் 12 மீட்டர் ஆழத்திற்குச் செல்கின்றன.
"அவை அப்படியே இருந்து, மரத்தூண்களும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டால், வீடுகளுக்கு எதுவும் ஆகாது," என்கிறார் அவர்.
ஆனால், அவை சிதையத் தொடங்கினாலோ அல்லது அழுகிவிட்டாலோ, விரிசல்கள் ஏற்படக்கூடும் என்றும், சீரற்ற சிதைவு அல்லது எடையின் சமநிலையற்ற பகிர்வு காலப்போக்கில் கட்டடங்கள் சாய்வதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
பைசா கோபுரத்தின் நிலை
புகழ்பெற்ற பைசா நகர சாய்ந்த கோபுரத்தைப் போலவே, மண்ணின் தன்மையும் கட்டடங்கள் ஒரு பக்கமாகச் சாய்வதற்குக் காரணமாக இருக்கலாம்.
பைசா பல்கலைக்கழகத்தின் மண் இயக்கவியல் மற்றும் அடித்தளங்கள் குறித்த பேராசிரியர் நுன்சியான்டே ஸ்குவெக்லியா, கோபுரத்தின் சாய்வை கண்காணிக்கும் குழுவில் ஒருவராக உள்ளார்.
"நிலம் மிகவும் மென்மையாக இருந்ததால், கோபுரம் தொடக்கத்திலிருந்தே சாயத் தொடங்கியது. அது 3 முதல் 4 மீட்டர் வரை புதைந்தது," என்று ஸ்குவெக்லியா பிபிசி வானொலி நிகழ்ச்சியான 'விட்னஸ் ஹிஸ்டரி'யிடம் கூறினார்.
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நில மாற்றங்களாலும் கட்டடங்கள் சாய்ந்துவிடலாம். உதாரணமாக, டெல்ஃப்ட்டில் உள்ள ஓட் கெர்க் (Oude Kerk) அல்லது பழைய தேவாலயத்தின் கோபுரம்.
"இது அவ்வளவு பிரபலமானது அல்ல, ஆனால் பைசாவின் சாய்ந்த கோபுரத்தைப் போலவே இதுவும் சாய்ந்துள்ளது," என்று கோர்ஃப் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Sergio Amiti vía Getty Images
"கால்வாய் இருக்கும் பக்கம் நிலம் தோண்டப்பட்டு, அங்கே மண் மென்மையாக இருப்பதால் இது கால்வாயை நோக்கிச் சாய்கிறது. எனவே, அதை நிமிர்ந்து நிற்க வைக்க அழுத்தம் குறைவாக உள்ளது. அதைக் கட்டியபோது, அது சாயத் தொடங்கியது."
நிலத்தடி நீரில் ஏற்படும் மாற்றங்களும் ஒரு கட்டடம் சாய்வதற்குக் காரணமாகலாம். சில சமயங்களில் கட்டடங்கள் வடிவமைப்பின் காரணமாகவே சாய்ந்திருக்கலாம் என்று கோர்ஃப் எச்சரிக்கிறார்.
"ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல வீடுகள் முன்னோக்கிச் சாய்ந்தே கட்டப்பட்டுள்ளன, ஏனென்றால் கடந்த காலத்தில் வணிகர்களின் வீடுகள் அவ்வாறுதான் கட்டப்பட்டன," என்று அவர் விளக்கினார்.
"அவை பெரும்பாலும் சேமிப்பிற்காகக் கால்வாய்களின் ஓரமாகக் கட்டப்பட்டன. வீட்டினுள் பொருட்களைக் கொண்டு செல்வதை எளிதாக்கும் வகையில், அவை முன்னோக்கிச் சாயும்படி கட்டப்பட்டன" என்று அவர் விளக்கினார்.
"அவை முன்னோக்கிச் சாய்ந்திருந்தால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அவை பக்கவாட்டில் சாய்ந்தால், அது அவற்றுக்கான நோக்கம் அல்ல என்பதை உறுதியாகக் கூறலாம்."
சாய்வை சரிசெய்தல்
இந்தச் சாய்ந்த கட்டமைப்புகளைப் பற்றி நாம் ஏன் அதிகம் கவலைப்படுவதில்லை?
கோர்ஃப் கருத்துப்படி, ஒரு கட்டடம் சாய்ந்துள்ளதால் மட்டுமே அது பலவீனமாக உள்ளது என்று அர்த்தமல்ல.
"கட்டமைப்பு ரீதியாக உறுதியற்றதாக இருக்க வேண்டுமானால், அது கணிசமாகச் சாய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் விஷயத்தில் நடந்தது போல, சில நேரங்களில் சாய்வுகளைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கோபுரம் ஆரம்பத்திலிருந்தே சாயத் தொடங்கியிருந்தாலும், 20-ஆம் நூற்றாண்டில் சாய்வு சீராக அதிகரித்து, நிலைமை மோசமடைந்ததை அளவீடுகள் காட்டின.

பட மூலாதாரம், PhotoFires vía Getty Images
"நிலைமை மிகவும் கவலையளிப்பதாக இருந்தது," என்று ஸ்குவெக்லியா நினைவு கூர்ந்தார்.
அதன்பிறகு, 1989-இல் இத்தாலிய நகரமான பாவியாவின் சிவிக் கோபுரம் இடிந்து விழுந்தது.
ஸ்க்வெக்லியாவின் கூற்றுப்படி, அதுவே ஒரு 'எச்சரிக்கையாக' அமைந்தது, ஒரு வருடம் கழித்து பைசாவின் சாய்ந்த கோபுரம் மூடப்பட்டது.
பைசாவின் சாய்ந்த கோபுரத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற, அதைச் சற்று நேராக்குவது குறித்துப் பல யோசனைகள் இருந்தன.
"மண் அகழ்வு முறையே தேர்ந்தெடுக்கப்பட்டது," என்று ஸ்குவெக்லியா விளக்குகிறார். "கோபுரத்தைத் தொடாமலேயே, அதன் அடித்தளங்களின் வடக்குப் பக்கத்திலிருந்து 37 கன மீட்டர் மண் அகழப்பட்டது."
அதன்பிறகு, 11 ஆண்டுகள் கழித்து கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது.
ஒரு 'சிறப்பு' வழக்கு
ஆனால், ஒரு கட்டடத்தை நேராக்கும் இந்த முறை பொதுவானது அல்ல என்று கோர்ஃப் கூறுகிறார். "அது பைசாவைப் பொறுத்தவரை மிகவும் விசேஷமானது. சாதாரண சூழ்நிலைகளில் அது அப்படி மேற்கொள்ளப்படாது."
ஆம்ஸ்டர்டாமின் வீடுகளைப் போல சாய்ந்த கட்டடத்திற்கு மரத்தூண்கள் இருந்தால், அடித்தளங்களை மாற்றுவது சாய்வு மோசமடைவதைத் தடுக்கலாம், ஆனால் அது 'ஆக்கிரமிப்பு' சார்ந்தது மற்றும் தரை தளத்தை அகற்றுவதை உள்ளடக்கியது.
ஹைட்ராலிக் ஜாக்குகளைக் கொண்டு காரை உயர்த்துவது போல, வீட்டையும் உயர்த்தி சாய்வைச் சரிசெய்ய முடியும் என்று கோர்ஃப் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் சில நேரங்களில் அது நன்மையை விட அதிக தீங்கை விளைவிக்கும்.

பட மூலாதாரம், Antonello NUSCA/Gamma-Rapho vía Getty Images
"அது அதிகமாகச் சாய்ந்திருந்தால், அதை நேராக்குவது ஆபத்தானது, ஏனென்றால் வீடு அந்தச் சாய்விற்கு ஓரளவிற்குப் பழகியிருக்கும்," என்று அவர் கூறுகிறார். "நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் விஷயங்களை மோசமாக்குவதைத் தவிர்க்க வேண்டும்."
சில கட்டடங்களை நிலைப்படுத்த முடியும் என்றாலும், அதில் குறைபாடுகளும் உள்ளன.
"கட்டடங்களைப் பொறுத்தவரை நீங்கள் எல்லா வகையான காரியங்களையும் செய்யலாம், எது வேண்டுமானாலும் சாத்தியம்," என்று கோர்ஃப் சுட்டிக்காட்டுகிறார். "ஆனால் அதற்கு அதிக பணம் செலவாகும் மற்றும் அது சிக்கலானது."
காலநிலை மாற்றத்தின் தாக்கம்

பட மூலாதாரம், Bloomberg / Contributor via Getty Images
நெதர்லாந்தில் மட்டும் சுமார் 75,000 வீடுகள் மரத்தூண்களின் மீது கட்டப்பட்டு சேதமடையும் அபாயத்தில் உள்ளன என்றும், ஆழமற்ற அஸ்திவாரங்களால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான வீடுகள் ஆபத்தில் உள்ளன என்றும் கோர்ஃப்-இன் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தச் சிக்கல்கள் இன்னும் மோசமடையக்கூடும்.
"காலநிலை மாற்றம் மற்றும் நிலத்தடி நீரில் ஏற்படும் மாற்றங்களால், சில சமயங்களில் விரைவான மாற்றங்களைக் காண்கிறோம்," என்கிறார் கோர்ஃப்.
நிலத்தடி நீர் மட்டம் குறைந்தால், மரத்தூண்கள் காற்றுடன் தொடர்புகொண்டு, சேதத்தை துரிதப்படுத்தலாம்.
நிலத்தடி நீரில் ஏற்படும் மாற்றங்கள் மண் அடுக்குகளையும் பாதிக்கலாம், இது வெவ்வேறு வகையான அடித்தளங்களைக் கொண்ட வீடுகளில் சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இது ஒரு மெதுவான செயல்முறை என்று அவர் கூறினார்.
பைசாவின் சாய்ந்த கோபுரத்தைப் பொறுத்தவரை, 2001-இல் முடிவடைந்த 11 ஆண்டுகால பணிக்குப் பிறகு கணிசமாக குறைக்கப்பட்டது.
எதிர்காலத்தில், அடுத்த 200 ஆண்டுகளுக்காவது அதன் பாதுகாப்பு உறுதியாக இருக்கும் என்று பொறியாளர்கள் நம்புகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























