'பிரதமர் விஜய்' முழக்கத்தை விமர்சிக்கும் காங்கிரஸ் - தவெகவின் அரசியல் வியூகம் என்ன?

த.வெ.க அமைச்சர்கள் பலரும் "வருங்கால பி.எம்" என முதலமைச்சர் ஜோசப் விஜயை மையப்படுத்திப் பேசி வருகின்றனர்.

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, த.வெ.க அமைச்சர்கள் பலரும் "வருங்கால பி.எம்" என முதலமைச்சர் ஜோசப் விஜயை மையப்படுத்திப் பேசி வருகின்றனர்.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் நீங்கள், நாளைய இந்தியாவின் பி.எம்" - கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் இவ்வாறு பேசினார்.

த.வெ.க அமைச்சர்கள் பலரும் "வருங்கால பி.எம்" என முதலமைச்சர் ஜோசப் விஜயை மையப்படுத்திப் பேசி வருகின்றனர்.

ரசிக மனநிலையிலேயே த.வெ.கவினர் உள்ளதையே இது காட்டுவதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல் கட்சியாக தங்கள் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவை காங்கிரஸ் வழங்கியது.

அப்போது, பனையூரில் த.வெ.க தலைவர் விஜயை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகி கிரிஷ் சோடங்கர், "உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் த.வெ.க உடன் கூட்டணி தொடரும்" என அறிவித்தார்.

முதலமைச்சராக மே 10-ஆம் தேதி ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். த.வெ.க அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜோசப் விஜய், 'பிரதமர் ஆவார்' என்ற ரீதியில் அமைச்சர்கள் பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் மனிதவளத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சரத்குமார், "நாளை இந்தியாவின் பி.எம் விஜய்" எனப் பேசினார்.

பட மூலாதாரம், Sarath/X

படக்குறிப்பு, முதலமைச்சருடன் அமைச்சர் சரத்குமார்.

'இன்றைய சி.எம், நாளைய பி.எம்'

ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சரத்குமார், "நாளை இந்தியாவின் பி.எம் விஜய்" எனப் பேசினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விருதுநகரில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இன்றைய சி.எம், நாளை பி.எம். வருங்காலத்தில் நம்முடைய ஆட்சி மட்டுமே இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "தமிழ்நாட்டை ஆள்கின்ற சக்தி மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவை ஆளக் கூடிய சக்தியாக விளங்கக் கூடியவர் தான் முதலமைச்சர்" எனக் கூறினார்.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மேடை ஒன்றில் பேசும்போது, "முதலமைச்சர் எங்கே போனாலும் அவர் மீது ஃபோகஸ் இருக்கும். நாளை டெல்லியே கூட அவராக இருக்கலாம்" எனக் குறிப்பிட்டார்.

திருப்பத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "2029-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக வருவதற்கு அவரால் (ஜோசப் விஜய்) முடியும். அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்.

"மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு நன்றாக ஆகிவிடும். அதன்பிறகு இந்தியா நன்றாக ஆகிவிடும். இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்றால் தலைவர் வேண்டும். அப்படிப்பட்ட ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மட்டும்தான்" எனவும் அவர் பேசினார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்

பட மூலாதாரம், CMOTamilnadu

'ரசிகர் மன்ற மனநிலை' - மாணிக்கம் தாகூர்

த.வெ.க அமைச்சர்கள் இவ்வாறு தொடர்ச்சியாகப் பேசி வருவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த அவர்,"ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பவர்களை மாற்ற முடியாது" எனக் குறிப்பிட்டார். பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு, "தொகுதி மறுவரையறையைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். நாங்கள் அந்தச் சண்டையில் இருக்கிறோம்" எனக் கூறினார்.

"த.வெ.க நிர்வாகிகளும் அமைச்சர்களும் இன்னமும் அரசியல் தலைவர்களாக பக்குவமடையவில்லை என்பதையே மாணிக்கம் தாகூரின் விமர்சனம் காட்டுகிறது" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"பிரதமராக ஜோசப் விஜயை முன்னிறுத்துவது காங்கிரஸ் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும். ஆனால், அதை த.வெ.கவினர் மட்டுமே முன்வைத்து வருகின்றனர். அக்கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ கருத்தாக எதுவும் வெளிவரவில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

'தேசிய தலைவராக கட்டமைக்க முயற்சி'

அதேநேரம், பிரதமராக ஜோசப் விஜயை முன்னிறுத்துவதில் பல்வேறு அரசியல் உத்திகள் இருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.

"மாநில அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு த.வெ.க தலைவர் விஜயை மாநிலத் தலைவராக மட்டும் சுருக்காமல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவராக கட்டமைப்பதற்கு த.வெ.க முயற்சி செய்கிறது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

திரைத்துறையின் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயின் ஆதரவுத்தளமாக அவரது ரசிகர்களே உள்ளதாகக் கூறும் அவர், "அவர்களைத் தீவிர அரசியல் தொண்டர்களாக மாற்றவும் கட்சியின் அடித்தளத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தவும் இது உத்வேகம் அளிக்கும் என நம்புகின்றனர்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், "காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாட்டில் இருந்தாலும் த.வெ.கவின் முக்கியத்துவம் மற்றும் பேச்சுவார்த்தை பலத்தை உயர்த்திக் காட்டுவதற்கு இது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.

இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் மாலன், "த.வெ.க மீது தேசிய அளவில் ஒரு பார்வை வரவேண்டும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். வெறும் மாநிலத்தை ஆளும் கட்சியாக த.வெ.கவை தேசிய ஊடகங்கள் பார்க்கக் கூடாது என்பதுதான் இதன் நோக்கமாக உள்ளது" எனக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளதையும் மாலன் குறிப்பிட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் 'மோடியா.. லேடியா?' என்ற முழக்கத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்வைத்தார். முன்னதாக, 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இது கட்சியின் முடிவு என்றும் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்வது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் தேசிய அளவில் முக்கிய சக்தியாக வருவோம் என்பது த.வெ.கவின் எண்ணமாக உள்ளது.

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் தேசிய அளவில் முக்கிய சக்தியாக வருவோம் என்பது த.வெ.கவின் எண்ணமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் மாற்றுக் கோணத்தை முன்வைக்கும் ஷ்யாம், "2029 மக்களவைத் தேர்தலின்போது த.வெ.க வெற்றி பெற்று எம்.பிக்களை பெறும்போது சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

அதாவது, தேசிய அளவில் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக த.வெ.க உருவாக வேண்டும் என்ற நீண்டகால திட்டமிடல் இதன் பின்னணியில் இருப்பதாகத் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் தேசிய அளவில் முக்கிய சக்தியாக வருவோம் என்பது த.வெ.கவின் எண்ணமாக உள்ளது" என்கிறார் மாலன்.

"தவெகவினரின் முழக்கம், மக்களவைத் தேர்தலில் பெரிதாக எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி இருப்பார்" என்கிறார்.

"தற்போது இந்தியா கூட்டணியில் த.வெ.க இல்லை. 2029-ஆம் ஆண்டில் ராகுல்காந்தியை இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களா என்பது முக்கியமானது. அதற்கான அவகாசம் இருப்பதால் 'பிரதமர் விஜய்' என்ற முழக்கத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை" என்கிறார் மாலன்.

தவெக கூறுவது என்ன?

"தேசிய அளவில் த.வெ.க கொண்டு செல்லும் யுக்தியாக இவ்வாறு பேசப்படுகிறதா?" என, த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பிரதமராக ஜோசப் விஜய் வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வாக்களிக்கும் மக்களில் கணிசமான அளவு ஜென் ஸிதலைமுறையினர் உள்ளனர். இவர்களின் தேர்வாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இருக்கிறார்" எனக் கூறுகிறார்.

"இவர்கள் வலுவான தலைவரை எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள மாநிலக் கட்சிகளில் வலுவான தலைவர்கள் இல்லை. அது விஜய்க்கு சாதகமாக மாறியுள்ளது" என்கிறார் அவர்.

"வட இந்தியாவில் த.வெ.க தலைவரை ஏற்றுக் கொள்வார்களா?" எனக் கேட்டபோது, "ஜோசப் விஜய் பேசும் பேச்சு வட இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பரவுகிறது. அவர் நவீன தோற்றத்தில் இருப்பது, இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது போன்றவை நம்பிக்கையைக் கொடுத்துள்ளன" என்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் குறித்து விளக்கம் அளித்த அவர், "ஜோசப் விஜய்யின் முகம் கூட்டணியின் முகமாக இருக்கும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு