டிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு கூறும் காரணம் என்ன? - அமைச்சர் மணிகண்டன் பேட்டி

சீனாவில் இருந்து வந்த டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவும், அதே சமயத்தில் சில சவால்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த செயலி பயன்படுத்தும் பலர் தங்களை ஒரு கதாநாயகன் கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு உள்ளதாக, அதனால் சில தேவையற்ற பிரச்சனைகள் உருவாக்கி வருவதாவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, சிலர் அரசியல் தலைவர்கள் முதல் காமெடி நடிகர்கள் வரை அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக டிக் டாக். செயலையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமூன் அன்சாரி கோரிக்கை வைத்தார். இதற்;கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் என்றார்.

டிக் டாக் செயலி தமிழகத்தில் தடைசெய்ய எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனிடம் பிபிசி தமிழ் நடத்திய சிறப்பு நேர்காணல்:

கேள்வி: தமிழக அரசு டிக் டாக் செயலியை தடை செய்ய காரணம் என்ன?

பதில்: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், குழந்தைகள்,பெரியோர்கள் அனைவராலும் பயண்படுத்தகூடிய டிக் டாக் செயலியால் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் வகையில் பாலியல் ரீதியாக மோசமான பதிவுகள் இடம்பெற்று வருகிறது. எனவே அதனை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும்அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்

அதன் அடிப்படையில் மத்திய அரசால் எப்படி உயிருக்கு ஆபத்தான விளையாட்டு ப்ளூ வேல் தடை செய்யப்பட்டதோ அதே போல்தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தெரிவித்துளோம். எனவே, விரைவில் மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும்.

கே: தடைசெய்யப்பட்ட டிக் டாக் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படது எனவே, செயலியை தடைசெய்ய தமிழக அரசு கூடுதலாக எவ்வாறான நடவடிக்கை எடுக்க போகிறது ?

ப: CERT-in (Computer Emergency Response Team Of India என்ற கண்காணிப்பு குழு உள்ளது அவர்களால் மட்டுமே செயலிகளை தடை செய்ய முடியும், இருந்தாலும் தமிழக அரசு சார்பில் மற்றொறு பக்கம் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முத்து குமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் டிக் டாக்செயலியை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செயலியை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தடையை நீக்க வேண்டும் என மேல் முறையீடு செய்தது.

ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி மதுரையில் உள்ள வழக்கை முடித்தால் மட்டும்மே இங்கு வழக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அந்நிறுவனம் மீண்டும் மதுரையில் மேல் முறையீடு செய்து கலாசார சீரழிவு,பாலியல் ரீதியான பதிவுகளை நீக்கி விடுவதாகவும் இனி வரும் காலங்களில் அவ்வாறான பதிவுகள் இடம்பெறாது என நிபந்தனைகளுடனே தடை நீக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் அவ்வாறான புகார்கள் அளிக்கப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கே: தமிழக அரசு சார்பில் டிக் டாக் செயலியை தடை செய்தாலும்; வேறு பெயர்களில் அவ்வாறான செயலிகள் மீண்டும் வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

ப: இது போன்ற செயலிகளை நீக்குவதற்கு வழிகள் உள்ளது, மத்திய அரசிடம் செயலிகளை நீக்குவதற்கு தடை செய்வதற்கு CERT-in அமைப்பு உள்ளது அதே போல் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை சார்பில் CERT-tn என்ற அமைப்பை உருவாக்க போகிறோம் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

CERT-tn அமைத்துவிட்டால் சமூகவளைதளங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவோ, தனி நபரை பற்றியோ, அல்லது பாலியல் ரீதியான தவறான பதிவுகள் போடப்பட்டால் உடனடியாக நீக்கி விடலாம். CERT-tn அமைப்பின் மூலமாகதேவையற்ற செயலிகள் தமிழத்தின் உள்ளே வரவிடாமல் முற்றிலும் தடுத்தவிடலாம். அதே போல் அவ்வாறு பதிவு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

கே: இவ்வாறான செயலிகளை தடைசெய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

ப: கலாச்சார சீரழிவு, குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு போன்றவற்றை தவிர்க்கலாம், அதே போல் விபரீத விபத்துகளை தடுக்கபடுவதுடன் சமுதாய ரீதியாக தமிழ் நாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்கலாம், அரசின் மீது அல்லது தனி நபர் மீது தவறான பதிவுகளை பதிவு தடுத்து நல்ல விஷயங்களை சமுதாயத்திற்கு கொடுக்கலாம்.

கே: டிக் டாக் செயலியை ஏன் தமிழக அரசு ஒரு பொழுது போக்கு அம்சமாக பார்க்ககூடாது?

ப: பொழுது போக்கான விஷயங்களை பதிவு செய்தால் யாருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை, சிலர் தனி திறமையுடன் பாடல் பாடுகிறார்கள் அது போன்ற விஷயங்கள் வரவேற்கதக்கதே. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் தவறான பதிவுகள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதால் இவ்வாறான செயலிகளை பொழுதுபோக்காக பார்க்க முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :