தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 06) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த வழக்கில் இருமுறை தண்டனை விவரங்கள் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 30 அன்றும் இன்றும் (ஏப்ரல் 2) ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை நீதிபதியிடம் கூறினர்.
கண்ணீர் மல்க நீதிபதியிடம் அன்று நடந்தவற்றை கூறினர். எந்த தவறும் செய்யாத அவரை கொன்றுவிட்டனர் என நீதிபதியிடம் கண்ணீர் மல்க ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என, ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்தார்.
தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?
நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார்.
உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" எனத் தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார்.