You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலித்துகள் போராட்டம்: துப்பாக்கியால் சுட்டவர் யார்? #BBCSpecial
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் ஏப்ரல் இரண்டாம் தேதி நடத்திய பாரத் பந்த்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜா செளஹான் என்பவர் குற்றச்சாட்டப்படுகிறார். அவர் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ராஜா செளஹானுக்கு 'கிரிக்கெட், கிடார் மற்றும் நடனம் பிடித்தமானது', அதோடு ஆயுதங்களிலும் விருப்பம் கொண்டவர்.
கலை விருப்பங்களினால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அவரது இறுதி விருப்பமான ஆயுதமே பூமராங்காக அவரை பதம் பார்த்துவிட்டது. தொலைகாட்சி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் செளகான் கைத்துப்பாக்கியால் சுடும் காட்சிகள் கடந்த சில நாட்களாக வைரலாகியது.
தலித்துகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம் இது.
ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக குவாலியரில் 40 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ராஜா செளஹானுக்கு எதிராகவும் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 308இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஆஷிஷ் கூறுகிறார். 308 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பதாக பொருள் கொள்ளப்படுவது.
22 வயதான தலித் இளைஞர் தீபக் கொலை தொடர்பாக பாபி தோமர் என்ற மற்றொரு இளைஞரின் மீதும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் இரண்டாம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் தீபக்.
பாபி தோமர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் காரணங்களால்தான் என்கிறார் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ராஜேஷ் சிங் தோமர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படை என்ன?
உள்ளூர் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்தார்.
கடந்த மூன்று தலைமுறைகளாக காந்தி சாலையின் ஒரு புறத்தில் வசித்துவரும் 450 பேர், தோமர் பில்டிங்கின் ஹோட்டல் மற்றும் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் இரண்டாம் தேதியன்று உயிரிழந்த இரண்டு தலித்துகளும் அதற்கு அருகில் உள்ள கல்லாகோடார் மற்றும் கும்ஹார்புராவில் வசிப்பவர்கள்.
தோமர் பில்டிங் இருக்கும் சாலையின் மறுபுறத்தில் ராஜா சொஹானின் வீடு இருக்கிறது.
தனது மகன் அன்று குவாலியரிலேயே இல்லை என்கிறார் ராஜா செளஹானின் தந்தை சுரேந்திர சிங் செளஹான்.
அவர் கூறுகிறார், 'எனது மகன் பி.ஈ படித்திருக்கிறான். ஸ்கில் இண்டியாவில் வேலை பார்க்கிறான். அந்த வேலையாக இரண்டு நாளாக வெளியூருக்கு சென்றிருந்தான்.'
தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்களில் கைத்துப்பாக்கியால் சுட்டபடி காணப்படும் புகைப்படம் இப்போது எடுத்தது அல்ல, அது பழைய புகைப்படம் என்கிறார் சுரேந்திர சிங் செளகான்.
துப்பாக்கிச் சூடு நடந்ததை ஒத்துக்கொள்ளும் ராஜா செளஹானின் பெரியப்பா நரேந்திர சிங் செளஹான், 'ஆனால் அதில் ராஜாவுக்கு எந்தவித பங்கும் இல்லை' என்கிறார்.
'அன்றைய தினம் முகத்தில் துணியால் மூடியிருந்த சிலர் கையில் தடிகள் மற்றும் நாட்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். பொதுமக்களை அடித்து உதைத்து, கண்ணால் பார்த்த பொருட்களை எல்லாம் உடைத்து எறிந்தார்கள்' என்கிறார் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீர்ரான நரேந்திர சிங் செளஹான்,
'ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, தற்காப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட்டோம்' என்கிறார்.
குவாலியரில் இருக்கும் சிவாஜி பல்கலைக்கழகத்தில் அரசியல்துறை தலைவர் ஏ.பி சிங்கின் கருத்துப்படி, போராட்டத்தின்போது தலித்கள் ஆயுதங்கள் பயன்படுத்தியதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
சிலர் இந்த ஊர்வலத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை அடுத்துதான் கூட்டத்தில் வன்முறை சம்பவங்கள் தொடங்கின் என்கிறார் ஏ.பி. சிங்.
அவர்கள் துப்பாக்கியால் சுட்டபோது வேறு வழியில்லாமல் நாங்கள் கற்களை வீச வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார் தீபக்கின் சகோதரன் ராஜன்.
'ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற ஊர்வலங்களுக்கு சாதிய சாயம் பூச முற்படுகிறார்கள். இது மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது' என்கிறார் தலித் செயற்பாட்டாளர் சுதீர் மண்டேலியா.
அருகில் இருக்கும் பிண்டே மாவட்டத்தில் ஸ்வர்ண் சமாஜ் கட்சியுடன் இணைந்த சிலர் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற தலித் பேரணிக்கு எதிராக ஊர்வலம் நடத்த முயற்சித்தார்கள்.
அப்போது அமைச்சர் லால் சிங் ஆர்யாவின் இல்லத்தின் மீதும் கற்கள் வீசப்பட்டன.
மத்திய பிரதேச தலித்துகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களே உயிரிழப்புக்கு காரணம் என்று நிரூபிக்கும் முயற்சியில் ஊடகங்களில் ஒரு பிரிவும், உள்ளூர் மக்களில் சிலரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஏழு பேரில் ஆறுபேர் தலித்துகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்