இதுதான் மியான்மரில் வசிக்கும் ரோஹிஞ்சா இந்துக்களின் நிலை

மியான்மர் அதிகாரிகள் இந்த உலகுக்கு சொல்ல விரும்புவது வருத்தம் தரும் ஒன்றாக இருக்கிறது.

ரகைன் மாகாணத்தில், பிரதான மாநிலமான சிட்வேவுக்கு பயணித்து, வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்ட அங்குள்ள ரோஹிஞ்சா இந்துகளை சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டோம்.

அவர்கள் சிறு குழு. அரசாங்க கணக்கின்படி, 10,000 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெடித்த கலவரத்தில் சிக்கிக்கொண்டவர்கள்.

அரசாங்கம் தன் தேவைகளுக்காக ரோஹிஞ்சா இந்துகளை பயன்படுத்துவதாக அங்குள்ள ஊடகவியலாளர்கள், உதவி குழுக்கள் தெரிவித்தனர். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

வடக்கு ரகைன் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏறத்தாழ 700 பேர் அரசாங்க அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.

சிட்வே பகுதியில் ஒரு கோயிலின் வாசலில் 40 வயதாகும் குக்கு பாலாவை சந்தித்து உரையாடினேன். அவர் சமீபத்தில்தான் ஒரு குழந்தையை பெற்றெடுத்திருந்தார். இதன் காரணமாக அவர் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தீவிரமான இந்து சடங்குகளின்படி அவர் பரிசுத்தமற்றவர்.

அவருக்கு குழந்தை பிறந்து 11 நாள்தான் ஆகி இருந்தது. அவர் அழுதுகொண்டே பேசத் தொடங்கினார்,"எனது கணவரும், ஆறு வயது பெண் குழந்தையும் வெளியே சென்று இருந்தனர். வங்காள தீவிரவாதிகள் எங்களை எச்சரித்தனர்"

"எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கணவரும், என் குழந்தையும் திரும்பி வரவே இல்லை. அதன்பின் சில நாட்களில் ராணுவம் எங்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியது." என்றார்.

அவர் சிட்வேவில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்திருக்கிறார். "நான் எனது கணவர் உயிரோடு இருக்க வேண்டும், அவர் என் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார் கண்ணீரோடு.

அழுதப்படியே,"எனது கணவர் மற்றும் என் குழந்தையின் சடலத்தை கண்டுப்பிடிக்க உதவ முடியுமா?" என்றார்.

இது ஒரு கதை மட்டுமல்ல, இதுபோல பல கதைகள் இங்கே உள்ளன. ஆனால், யாரும் இங்கே ரோஹிஞ்சா என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. அவர்களை பொறுத்தவரை இவர்கள் 'வங்காளத் தீவிரவாதிகள்.'

நான் யாரிடம் பேசினாலும், நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிய அதிகாரிகள் நின்றனர். ஆனால், வங்கதேசத்தில் எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் நீங்கள் வேறு மாதிரியான கதைகளை கேட்க முடியும்.

ஏறத்தாழ 6 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

மியான்மர் ராணுவம் கொத்து கொத்தாக பெண்களை வன்புணர்வு செய்ததாகவும், கொலைகள் செய்ததாகவும் கூறுகிறார்கள்.

இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஆகஸ்ட் 25-ம் தேதி வடக்கு ரகைன் மாகாணத்தில் 30 காவல் நிலையத்தை எரித்ததை இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.

இதன் தொடர்சியாகத்தான் அவர்களை பாதுகாப்பதற்காக நாங்கள் அங்குள்ள ரோஹிஞ்சா பெளத்தர்கள், ரோஹிஞ்சா இந்துக்கள் மற்றும் ரோஹிஞ்சியா முஸ்லிம்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்தோம். ஆனால் சர்வதேச சமூகம் இதனை நிராகரித்துவிட்டது.

ஐ.நா அதிகாரிகள் இதை "இனச் சுத்திகரிப்பிற்கான பாடநூல் உதாரணம்" என்றனர்.

நான் செப்டம்பரில் வங்கதேசத்தில் நேர்காணல் செய்த பதின்வயது ரோஹிஞ்சா இந்து பெண்ணின் மைத்துனனை, சிட்வேவில் உள்ள அரசாங்க முகாமில் சந்தித்தேன்.

அந்த பதின்வயது பெண்ணின் பெயர் அனிகா தார். அவளுக்கு 15 வயதுதான் ஆகிறது. ஆனால், கர்ப்பிணியாக இருந்தார். தன் கணவரையும் இழந்திருந்தார்.

அனைவரும் உயிருக்கு பயந்து ஓடியதை கண்டு அவர் அச்சத்தில் இருந்தார்.

அவர் கூறுகிறார், "வடக்கு ரகைனில் உள்ள ஃபகிராபஜார் அமைந்துள்ள எங்கள் விட்டை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தாக்கினர்." ஆனால், அவளால் அவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

ஆனால், அவரது மைத்துனர் அஷீஷ் குமார் தார், இஸ்லாமியவாத தீவிரவாதிகளை குறிப்பிட குக்கு பாலா பயன்படுத்திய அதே பதங்களைதான் இவரும் பயன்படுத்தினார்.

"என் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால், அவர் அனிகா தார் வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தேன். என் குழந்தையும், அனிகாவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் காட்டில் கொல்லப்பட்டார்." என்கிறார்.

அந்த குழந்தைக்கு எட்டு வயதுதான் ஆகிறது. அவர் தன் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அந்த புகைப்படங்களில் இருந்தவை, மியான்மர் அதிகாரிகள் குறிப்பிடும் ரோஹிஞ்சா இந்துக்கள் புதைக்கப்பட்ட இடம்.

அந்த சுடுகாட்டினை பயன்படுத்திக்கொள்ள ராணுவம் பலரை அழைத்து வந்தது. அதில் அஷிஷ் குமாரும் ஒருவர்.

அங்கு பலர் புதைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் யார் யார் என்று அடையாளம் காண்பது கடினம்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊடகவியலாளர், நாங்கள் தொடர்ந்து அழுகுரல்களை அங்கிருந்து கேட்கிறோம் என்றார்.

பல முறை அனுமதி கேட்டும், மியான்மர் அரசாங்கம் என்னை வடக்கு ரகைன் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுமதிக்கவில்லை.

ஆனால், ஒரே ஒருவர்தான் அந்த பகுதிகளை பார்வையிட முடியும். அவர் ஆங் சான் சூச்சி. அவருடைய மெளனத்திற்காக சர்வதேச சமூகம் அவருக்கு அழுத்தம் தந்தது.

அவர் ரோஹிஞ்சா இஸ்லாமிய சமூகத்தை சந்தித்தார். அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள கூடாது என்றார். சிட்வேவில் நான் அதிகாரிகளாலும், உளவுத்துறை அதிகாரிகளாலும் கண்காணிக்கப்பட்டேன்.

ஆனால், ஒரு நாள் அவர்களிடமிருந்து தப்பித்து, அவர்களுக்கு தெரியாமல் ரோஹிஞ்சா இந்து சமூகத்தைச் சந்தித்தேன்.

அவர்களிடம் நீங்கள் அரசாங்கத்தைக் கண்டு அஞ்சுகிறீர்களா என்றேன். அவர்கள் உடனே பதிலளித்தனர். ஆனால், அந்த பதில் பூசி மொழுகுவதாக இருந்தது.

"நாங்கள் அச்சத்தில் இருந்தோம். இப்போது ரோஹிஞ்சா முஸ்லி ம்களுக்கு நடப்பது நாளை எங்களுக்கும் நடக்கலாம். அரசாங்கம் எங்களுக்கு அடையாள அட்டை அளித்து இருக்கிறது. ஆனால், முழுமையான குடியுரிமை தரவில்லை. எங்களால் அரசாங்க வேலை பெற முடியாது. சுதந்திரமாக பயணிக்க முடியாது." என்றார் முவாங்தாவ் கிராமத்தைச் சேர்ந்த நேரு தார்.

சிட்வேவிலிருந்து யாங்கூன் வரை எல்லா மத சிறுபான்மையினரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கியான் மின், ரோஹிஞ்சாவில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லி ம் தலைவர், இம்மக்களை காக்க முயற்சித்து வருகிறார். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கூட.

முஸ்லீம் தீவிரவாதிகள்தான் ரோஹிஞ்சியா இந்துக்களை சொல்வதாக அரசு சொல்வதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

அர்சா இஸ்லாமியவாத தீவிரவாதிகள் சட்டத்திற்கு புறம்பானவர்கள். அவர்கள் ரோஹிஞ்சா இந்துகளை கொன்றார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவர்களால் பெரிய அளவிலான குழிகளை தோண்டி, அதில் கொல்லப்பட்டவர்களை புதைத்திருக்க முடியாது என்கிறார். அவர்கள் தப்பி ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால், அரசு தன் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றங்களையும் மறுக்கிறது. குறிப்பாக இன அழிப்பு குறித்து தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. அரசு, தாங்கள் சிறுபான்மை இந்து குழுக்களை காப்பதாக கூறுகிறது.

நான் மியான்மர் சமூக நலத் துறை அமைச்சர் வின் மியாட் அயியைச் சந்தித்தேன்.

அவர் என்னை அன்புடன் வரவேற்றார். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணம் தீவிரவாதிகள் என்றார். தீவிரவாதிகள் ரகைன் பகுதியை கைப்பற்ற திட்டமிடுகிறார்கள். அதன் காரணமாகதான் இந்த வன்முறை என்றார். இது பொதுவாக அரசின் நிலைப்பாடு.

மேலும் அவர், "ஏன் அவர்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர் அச்சப்பட்டு இருக்கலாம். இதன் காரணமாக அங்கேயும் இங்கேயும் செல்லலாம். ஆனால், அவர்கள் திரும்ப கொண்டிருக்கிறார்கள்"

அஷிஷ் குமார் தார் அனிகா மியான்மர் திரும்பிவிட்டதாக கூறினார். அவர் தன் வீட்டில் குழந்தையை பெற்றெடுப்பதைதான் பாதுகாப்பனதாக நினைக்கிறார்.

ஆனால், குக்கு பாலாவிற்கு அப்படி இல்லை. அவரது வாழ்க்கை துயரமான ஒன்றாகதான் இருக்கப் போகிறது.

நான் பாலாவிடம் பேசிய மூன்று தினங்களுக்கு பின்பு, அவரும் அவரின் மூன்று குழந்தைகளும் வடக்கு ரகைன் மாகாணத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டார் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :