சுதந்திர தின விழாவில் யாரெல்லாம் கொடியேற்றலாம்? அந்த உரிமை யாருக்கு உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
"சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநகராட்சிப் பள்ளிகளில் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்களை வைத்து தேசியக் கொடி ஏற்றுவதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகள், கவுன்சிலர்கள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, சென்னை மாநகராட்சி துணை மேயர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றுவது மரபாகத் தொடர்கிறது. கவுன்சிலர்கள் கொடியேற்றுவதற்கு அனுமதி உள்ளதா?
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 29ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது பேசிய மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கவுன்சிலர்கள் கொடியேற்றுவது தொடர்பாகப் பேசினார்.
அவர் பேசும்போது, "ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தந்த வார்டுக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொடியேற்ற வேண்டும். இதை அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களும் மண்டல தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதை ஒரு பிரச்னையாக அ.தி.மு.க பெண் கவுன்சிலர் முன்வைத்ததாகக் கூறுகிறார், தி.மு.க கவுன்சிலரும் பணிகள் நிலைக்குழு உறுப்பிருமான கண்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " சுதந்திர தின விழாவில் கவுன்சிலர்களை கொடியேற்ற அழைப்பது வழக்கமாக உள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கும் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், @priyarajan
'அழைப்புகள் வருவதில்லை'
"பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் கொடுப்பது, போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போன்ற நிகழ்வுகளுக்கு கவுன்சிலர்களை அழைப்பார்கள். ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு இதுபோன்ற அழைப்புகள் வருவதில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதை உறுதி செய்யும் வகையில் மேயரின் அறிவிப்பு இருந்ததாக அவர் தெரிவித்தார். இதே கருத்தை முன்வைக்கும் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், "ஆட்சி மாறிய பிறகு கவுன்சிலர்களுக்கு அரசு அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை" என்றார்.
ஆகவே, "தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளோம். தங்கள் வட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளில் கவுன்சிலர்கள் கொடியேற்றுவார்கள். இந்த முறை அழைக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதால் முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், @Chennaicorporation
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கொடியேற்றலாமா?
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், "உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லாமல் தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்" என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் மரபுகளின்படி பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கொடியேற்ற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களும் ஆசிரியர்களும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பி.ஏ.நரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "தலைமை ஆசிரியர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கொடியேற்றுகின்றனர். இதற்கு எந்தவிதத் தடையும் இல்லை" என்று பதில் அளித்தார்.
"மக்கள் பிரதிநிதி வசிக்கும் பகுதியில் நான்கைந்து பள்ளிகள் இருந்தால் ஒரு பள்ளியில் மட்டும் அவர் கொடியை ஏற்றலாம். நேரம் குறைவாக இருப்பதுதான் காரணம். இதை தலைமை ஆசிரியர் முடிவு செய்வார்" என அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "திங்கள் கிழமைதோறும் பள்ளி தலைமை ஆசிரியர் கொடியேற்றுகிறார். சிறப்பு வாய்ந்த நாட்களில் மக்கள் பிரதிநிதிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்றார்.

பட மூலாதாரம், MHA
தேசியக் கொடி விதிமுறைகள் கூறுவது என்ன?
தேசியக் கொடி விதிமுறைகள் (Flag Code of India) குறித்து 2022ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு கையேடு, இதன் சாராம்சத்தை அரசின் தகவல் தொடர்புப் பணியகம் (PIB) செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.
அதில், தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான சட்டங்கள், மரபுகள், நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் கொடி விதிமுறைகள் 2002 குறிப்பிடுகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதை இந்தச் சட்டம் முறைப்படுத்துகிறது.
- பாலியெஸ்டர், விசைத்தறி துணி, கைத்தறி, பருத்தி, கம்பளி, பட்டு, காதி ஆகியவற்றால் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- தேசிய கொடிக்கான மரியாதை மற்றும் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் பொதுமக்கள், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் அனைத்து நாட்களிலும் விழாக்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
- தேசியக் கொடியை காட்சிப்படுத்தும்போது அது கௌரவமான நிலையைப் பெற்றிருக்க வேண்டும். கசங்கிய அல்லது கிழிந்த தேசியக் கொடியை காட்சிப்படுத்தக் கூடாது.
- தேசியக் கொடி தலைகீழான நிலையில் காட்சிப்படுத்தக் கூடாது. அதாவது காவி நிறம் அடிப்பகுதியில் இடம்பெறக் கூடாது.
- தேசியக் கொடியைவிட உயரமானதாகவோ அல்லது பக்கத்திலோ வேறு எந்தக் கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது.
- தேசியக் கொடி பறக்கும் கொடிக் கம்பத்துக்கு மேலே பூக்கள், மாலைகள் அல்லது அடையாளச் சின்னங்கள் உள்பட எந்தப் பொருளும் பொருத்தப்படுவதற்கு அனுமதியில்லை.
- மேசை விரிப்பாகவோ அல்லது மேடை மீதோ தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது.
- எந்த நபரும் இடுப்புக்குக் கீழே அணியும் துணியாக தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது. மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள், மற்ற ஆடைகளில் அச்சிட்டுப் பயன்படுத்தக் கூடாது.
- பொது கட்டடங்களில் அனைத்து நாட்களிலும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தேசியக் கொடி பறக்கலாம். அவை வேகமாக கொடியேற்றப்பட்டு மெதுவாக இறக்கப்பட வேண்டும்.
- இந்திய அரசின் உத்தரவு இல்லாத தருணங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கக் கூடாது. அரைக் கம்பத்தில் பறக்கவிடும்போது கம்பத்தின் உச்சி வரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரைக் கம்பம் வரையில் இறக்கப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
தேசியக் கொடியை கார்களில் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு கொடி விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், இந்திய தூதரகங்களின் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மாநிலம் அல்லது யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் பயன்படுத்தலாம்.
- அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், மாநில சட்ட மேலவைகளின் தலைவர்கள், சட்டமன்ற சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் ஆகியோருக்கு மட்டுமே கார்களில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு காரில் பறக்கவிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தனி நபர்கள் தங்கள் சொந்த இடத்தில் கொடியைப் பறக்கவிடலாம். ஆனால், சூரிய உதயம் முதல் மறையும் வரை மட்டுமே கொடியைப் பறக்கவிட வேண்டும்.
- கொடியில் எந்தவிதமான எழுத்துகளும் கீறல்களும் இடம்பெறக் கூடாது. கொடியை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
- கொடியை எரிப்பதோ, தண்ணீரில் நனைத்து எடுப்பதோ, காலில் போட்டு மிதிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கொடி விதிகளில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று பக்கங்களில் மாணவர்களும் நான்காவது பக்கத்தின் மையத்தில் கொடிக் கம்பமும் இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர், மாணவர் தலைவர், கொடியேற்றும் நபர் (தலைமை ஆசிரியராக இல்லாதவர்) ஆகியோர் கொடிக் கம்பத்துக்கு மூன்று அடி தொலைவில் நிற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கொடியேற்றுவது குறித்து கொடி விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































