இரான்-அமெரிக்கா இடையே "போர் நிறுத்தம்" : ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரான் ஒப்புதல்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக இரான் கூறியுள்ளது.

"இரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால்" போர் நிறுத்தத்திற்கு இரான் ஒப்புக்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

"இரண்டு வார காலத்திற்கு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

"இரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு," இது நடைபெறும் என்று அவர் கூறுகிறார்.

இரான் ஓர் உடன்பாட்டிற்கு வர இந்திய நேரப்படி இன்று அதிகாலை வரை அமெரிக்காவால் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இல்லையெனில் "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் கூறியது என்ன?

"பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று இரவு இரானுக்கு அனுப்பப்படவிருந்த அழிவுகரமான படைகளை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

"இஸ்லாமியக் குடியரசான இரான், ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகவும் உடனடியாகவும் பாதுகாப்பாகத் திறக்க ஒப்புக்கொண்டால், இரானுக்கு எதிரான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த ஒப்புக்கொள்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

"இது இரு தரப்பும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தமாக இருக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இதற்கான காரணம், நாங்கள் எங்கள் ராணுவ இலக்குகளை ஏற்கெனவே அடைந்துள்ளோம் என்றும், இரானுடன் நீண்டகால அமைதி குறித்து ஓர் ஒப்பந்தம் உருவாகும் நிலையில் உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

"இரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு எங்களுக்குக் கிடைத்துள்ளது. அது பேச்சுவார்த்தைக்கு ஏற்ற அடிப்படையாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்," என்றும் அவர் கூறினார்.

"முன்பு சர்ச்சையாக இருந்த அம்சங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு வார காலம் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவும்," என்றும் அவர் தெரிவித்தார்.

"அமெரிக்காவின் அதிபராகவும், மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், இந்த நீண்டகால பிரச்சினை தீர்வுக்கு நெருக்கமாக இருப்பது பெருமையாக உள்ளது," என்று அவர் கூறினார்.

இரான் கூறியது என்ன?

இரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையை டிரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த அறிக்கையில், "இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"பாகிஸ்தான் பிரதமர் தனது சமூக வலைதள பதிவில் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலாகவும், அமெரிக்கா தனது 15 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை முன்வைத்ததையும், இரானின் 10 அம்ச முன்மொழிவின் பொது வடிவமைப்பு பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஏற்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததையும் கருத்தில் கொண்டு, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் ராணுவப் படைகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரண்டு வார காலத்திற்கு, இரானின் ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடற்பயணம் சாத்தியமாகும்," என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"கெடு முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் போர் நிறுத்தம்"

ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரானுக்கு அமெரிக்கா விதித்திருந்த கெடு முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக "போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது" என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், "அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஓர் உறுதியான உடன்படிக்கைக்காக மேலும் பேச்சுவார்த்தை நடத்த", ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்திற்கு தூதுக்குழுக்களை அழைப்பதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார்.

ஷெபாஸ் ஷெரீஃப் தனது அறிக்கையில் "இரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்காவும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது."

இந்த நடவடிக்கையை அவர் வரவேற்பதோடு,"இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஞானத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

"'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்' நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் கூடுதல் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்," என்றும் ஷெரீஃப் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

வெற்றியாகக் காட்டும் இரான் அரசு

வாஷிங்டனில் உள்ள பிபிசி பாரசீக நிருபர் கஷாயர் ஜோனெய்டியின் கூற்றுப்படி, இரான் அரசு மற்றும் அரசின் ஊடகங்கள் இந்த நிலையை ஆட்சிக்கு ஒரு பெரிய வெற்றியாகக் காட்டுகின்றன.

இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்த போரில் தங்களின் பெரும்பாலான இலக்குகளை இரான் அடைந்துள்ளதாகவும், எதிரி வரலாற்றில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த போரின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில், இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இது இரானின் ஆட்சிக்கான இருப்பு சார்ந்த ஒரு போராகக் கருதப்பட்டது.

அதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொண்ட 30 நாட்களுக்கு மேலான இந்தப் போரில் தாங்கள் தப்பித்திருப்பதே வெற்றியாக இரான் கருதக்கூடும் என ஜோனெய்டி கூறுகிறார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு