'குட்கா வழக்கு, நில மோசடி' - சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது விமர்சிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Dr.C.Vijayabaskar/X
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இவர்களை தவெகவில் சேர்ப்பது குறித்துக் கடும் விமர்சனங்கள் எழத் துவங்கியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை முடிவுக்கு எதிராக 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.
பின்னர், அதிமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும், மீண்டும் அதிமுக தலைமையுடன் சமரசமாகிவிட்டனர். சிலர் அதிருப்தியுடன் வெளியில் இருந்தனர்.
அவர்களில் அதிமுக சார்பில் வென்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
இவர்களுக்குப் பிறகு, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இவர்களில் சி.விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, அமலாக்கத் துறை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. நில மோசடி வழக்கில் அவர் கைதாகியுள்ளார். மேலும் பல வழக்குகளும் அவர் மீது இருக்கின்றன.
இவர்கள் இருவரையும் தவெகவில் சேர்ப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

பட மூலாதாரம், Youtube/tvk
பதவி விலகிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் பின்னணி என்ன?
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினராக வென்று ராஜினாமா செய்துள்ள ஜெயக்குமார், பிபிஎம் படித்துள்ளார். இவர், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை தோற்கடித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினராக வென்ற மரகதம் குமரவேல், இதே தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். எம்.ஏ. பட்டதாரியான இவர், இதற்கு முன்பு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அதிமுக-வில் மகளிர் அணி இணைச் செயலாளராக இருந்தவர்.
தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக வென்ற சத்தியபாமா பத்தாம் வகுப்புப் படித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இந்திராணியை தோற்கடித்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையைத் தோற்கடித்த இசக்கி சுப்பையா, இதே தொகுதியில் இதற்கு முன்பு 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2011ஆம் ஆண்டில், ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மாதத்திலேயே அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்றவர், சி.விஜயபாஸ்கர். எம்பிபிஎஸ் மருத்துவரான இவர், கடந்த 2013ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பின் 2016–2021 அதிமுக ஆட்சிக் காலத்திலும் அதே பதவியில் நீடித்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 2016 தேர்தலில் கரூர் தொகுதியில் வென்று, போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வேட்பாளர் மதியழகனை 1821 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதியில்தான் விஜய் பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்த வேலுசாமிபுரம் பகுதியும் உள்ளது.

பட மூலாதாரம், TamilNadu Assembly
இரண்டு விஜயபாஸ்கர்களின் மீதும் இருக்கும் வழக்குகள்
எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது 37 வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏழு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், காவல்துறை ஆவணப்படி 7 வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றில் சொத்துக் குவிப்பு வழக்கு, குற்றவியல் வழக்குகளும் உள்ளடங்கியுள்ளன.
கரூர் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட நில மோசடி மற்றும் மிரட்டல் வழக்கில் 2024 ஜூலையில் சி.பி.சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியில் வந்தார்.
இவர் மீது 2021ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறையால் சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்ததைவிட 55% கூடுதலாக சொத்துகள் சேர்த்ததாக இவர் மீதும் இவரது மனைவி மற்றும் சகோதரர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
சி.விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை சார்பில் 2 வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2 வழக்குகள், 1 சிபிஐ வழக்கு உள்பட 12 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களைத் தனது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனுவில் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2016–2021 ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது, தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2021ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர், அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். வருமான ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டு ₹35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் விஜயபாஸ்கர் தரப்பு கோரிக்கையை ஏற்று, மேலதிக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இவர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இவருடைய வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடந்தபோது, ஒரு டைரி கைப்பற்றப்பட்டது.
அதிலிருந்த விவரங்களை வைத்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு, ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.39.91 கோடி லஞ்சம் பெற்றதாகத் தகவல் கிடைத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் உள்பட எந்த வழக்கிலும், தாங்கள் எந்தத் தண்டனையும் பெறவில்லை என்று இரண்டு விஜயபாஸ்கர்களும் தங்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இவர்கள் 6 பேருமே, அதிமுக தலைமையின் மீது தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பொய் வழக்குகள் போடப்பட்டு, தம் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டதாகவும், அத்தனையையும் தாண்டி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் "தனக்குப் பரிசாகக் கிடைத்தது துரோக ஈட்டி மட்டும்தான்" என்று அறிக்கை வெளியிட்ட அவர், ''நாம் யாரை எதிர்த்து, இத்தனை வழக்குகளையும், ரணங்களையும் ஏந்தினோமோ, இன்று அதே கட்சியுடன் கைகோர்த்து ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டது. பழனிசாமியின் அந்த முடிவை எதிர்த்தோம். எங்கள் எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுதான், ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிவில் நிறுத்தியுள்ளது'' என்று கூறியுள்ளார்.
தவெக தலைமை உத்தரவாதம் கொடுத்ததா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பகிரங்கமாகவே குற்றம் சாட்டி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்ட நிலையில், சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கப் பதிவில் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியைக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதில், ''தலைமைத்துவம் என்பது அதிகாரம் அல்லது ஆணவத்தின் அடிப்படையில் அமையாமல், அக்கறை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். உணர்வுகள் மற்றும் மனநிலைகள் புறக்கணிக்கப்படும்போது ஓர் அர்த்தமுள்ள பயணத்தை மேற்கொள்ள முடியுமா? கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெறத் தவறும் ஒரு தலைமையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவர்களைப் போலவே, பதவியை ராஜினாமா செய்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க அதிமுக முயன்றதை ஏற்க முடியாமலே இந்த முடிவை எடுத்ததாகப் பேசியுள்ளனர்.

பட மூலாதாரம், TVK
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தனது தொகுதியில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது இதே கருத்தைத் தெரிவித்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் அவர்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் கருத்துகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறுத்துள்ளதுடன், ''அவையனைத்தும் கட்டுக்கதை'' என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஊடகங்களில் பேசியுள்ள அவர், "எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் முயன்றார் என்று வதந்தி பரப்பப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அவர்கள் தவெகவுக்கு செல்வதை நியாயப்படுத்த திட்டமிட்டு கட்டுக்கதை பரப்புகின்றனர்'' என்றார்.
இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைவது குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கடும் விமர்சனங்களும் விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.
பிபிசியிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ''இரண்டு விஜயபாஸ்கர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில், இவர்களுக்கு மீண்டும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கி, வெற்றி பெற வைத்து, அமைச்சராக்க தவெக தலைமை முயன்றால் அதில் இருந்து அந்தக் கட்சியும் ஊழல் கட்சியாகவே அறியப்படும். எனவே, அதை தவெக தலைமை செய்யாது என நம்புகிறேன்,'' என்றார்.
''தவெகவுக்கு வாக்களித்த மக்கள், ஒரு மாற்றத்தை நினைத்து வாக்களித்தனர். சொத்துக் குவிப்பு, குற்ற வழக்குகள் அதிகமாகவுள்ள இவர்களை வேட்பாளராக தவெக நிறுத்தினால் இடைத்தேர்தல் என்ற வகையிலும், அவர்களுடைய செல்வாக்கிலும் அவர்கள் வெற்றி பெறவும் வாய்ப்பு அதிகம். ஆனால் திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்து வரும் முதல்வர் விஜய் இவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தினால் தவெகவும் அந்த கட்சிகளை போல மாறியதாகக் கருதப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் தவெகவின் பலத்தை அதிகமாக்கவே, பிற கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றிபெற வைக்க முதல்வர் விஜய் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியின்போது கூறிய தகவலால் இந்தக் கருத்து இன்னும் வலுப்பெற்றது.
ஆனால் தாங்கள் யாரும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியே ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்ததாகக் கூறுகிறார் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா.
பிபிசியிடம் பேசிய அவர், '' திமுகவுடன் அதிமுக தலைமை மறைமுகக் கூட்டணி வைக்க முயன்றது ஒன்றுதான் எங்களுக்கு ஏற்பட்ட ஒரே அதிருப்தி. எங்களில் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதாக தவெக தரப்பில் எந்த உறுதியும் தரப்படவில்லை. ஆனால் முதல்வர் விஜய் எங்கள் முடிவை ஏற்று, மீண்டும் வாய்ப்பு வழங்குவாரென நம்புகிறோம்'' என்றார்.
தவெக தரப்பு கூறுவது என்ன?
பிபிசியிடம் பேசிய தவெக செய்தித்தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, ''சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே அதிமுக தலைமை மீதான அதிருப்தியில் ராஜினாமா செய்து இருப்பதைத் தெளிவாக விளக்கியுள்ளனர். தவெகவில் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட எந்தவிதமான உறுதியும் தவெக தலைமையிடமிருந்து தரப்படவில்லை. ஆனால் இவர்களிருவருக்கும், தவெக தலைமைக்கும் இடையில் எத்தகைய பேச்சுவார்த்தை நடந்தது, ஏதாவது உறுதி தரப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.'' என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ''ஐந்தாண்டுகளாக வெறும் எம்எல்ஏவாக இருக்க முடியாது என்பதால்தான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தாங்களாகவே ராஜினாமா செய்து கொண்டிருக்கின்றனர்.'' என்று கூறியவரிடம், ''குட்கா வழக்கு உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ள 2 விஜயபாஸ்கர்களும் தவெகவில் இணைகிறார்களே?'' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நிர்மல்குமார், ''அவர்கள் இப்போது எம்எல்ஏவாகக் கூட இல்லை. இப்படி தினமும் பல ஆயிரம் பேர் இணைகின்றனர். யார் எங்கள் கட்சியில் இணைந்தாலும், அவர்கள் மீதான எந்த வழக்கிலும் எவ்விதமான சமாதானமும் செய்யப்படாது. சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். ஊழல்வாதிகள் யாரையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர்கள் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள் வருகின்றனர். அவர்கள் மீதான வழக்கு விபரங்கள் எங்களுக்கு தெரியாது. கண்டிப்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் எந்தப் பின்னடைவும் இருக்காது.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























