ஆந்திராவில் தங்கியிருக்கும் இந்த இரானிய பெண்கள் அரசின் உதவியை நாடியது ஏன்?

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"இரானில் உள்ள எங்களது குடும்பத்தினரிடம் இருந்து பத்து நாட்களாக எந்தத் தகவலும் இல்லை, அவர்களுக்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என நாங்கள் பயப்படுகிறோம்" என்று விசாகப்பட்டினத்தில் டி. பார்மசி பயிலும் இரண்டு இரானிய மாணவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் சகோதரிகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இரான் போர் விசாகப்பட்டினத்தில் படிக்கும் இந்த இரண்டு மாணவிகளின் வாழ்க்கையையும் பாதித்து வருகிறது. தங்கள் நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருவதால், அங்குள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நலம் குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

பத்து நாட்களுக்கு முன்பு வரை குடும்ப உறுப்பினர்கள் தம்மிடம் பேசியதாகவும், ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

தகவல் தொடர்பு அமைப்புகள் துண்டிக்கப்பட்டு முடங்கியுள்ளதால், நண்பர்களிடம்கூட பேச வழியின்றி அந்த மாணவர்கள் உளவியல் ரீதியான அழுத்தத்தை எதிர்கொள்வது போலக் காணப்பட்டனர்.

ஜெய்னப் மொஹம்மதி, சொல்மாஸ் மொஹம்மதி ஆகிய இந்த இரண்டு இரானிய பெண்களும் விசாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகளை அணுகி, தங்களை விரைவில் பாதுகாப்பாக இரானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பணம் வரவில்லை; வாடகை செலுத்த முடியவில்லை'

விசாகப்பட்டினத்தில் தங்கியிருந்த இந்த இரண்டு இரானிய மாணவிகள் குறித்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரிய பின்னரே தெரிய வந்தது. இது குறித்து அறிந்த பிபிசி, அவர்கள் இருவரும் பயின்று வந்த கல்லூரிக்குச் சென்று அவர்களிடம் பேசியது.

சொல்மாஸ் மொஹம்மதி, ஜைனப் மொஹம்மதி ஆகிய இந்த இரண்டு பெண்களும் தங்களது மூன்று குழந்தைகளுடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் புதன்கிழமை அன்று குழந்தைகளுடன் விசாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் இருவரும் அல்வால் கல்வி நிறுவனத்தில் டி. பார்மசி முடித்துவிட்டு, தற்போது பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சர்வதேச பதற்றம் காரணமாக கடந்த பத்து நாட்களாகத் தகவல் தொடர்பு அமைப்புகள் முடங்கியுள்ளதால், தங்களது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அவர்களுடன் பேச முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

"நாங்கள் எங்கள் பயிற்சியை முடிக்கவுள்ளோம். நாங்கள் 2018 முதல் இங்கு தங்கி டி. பார்மசி முடித்தோம். பின்னர் இரான் சென்றோம். இப்போது மீண்டும் பயிற்சிக்காக வந்துள்ளோம். இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் வந்தோம். பயிற்சிக் காலம் ஜூன் முதல் வாரத்தில் நிறைவடையும்."

"எதிர்பாராத சூழ்நிலைகளால், இரானில் உள்ள எங்களது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை நாங்கள் இழந்துவிட்டோம். அவர்களைப் பற்றிய தகவல்களை அறிய நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. மேலும், இரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து அவர்கள் அனுப்பும் பணமும் இங்கு வந்து சேரவில்லை," என்று ஜெய்னப் மொஹம்மதி பிபிசியிடம் கூறினார்.

"எங்களால் தினசரி செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை. நாங்கள் இன்னும் சுமார் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில், எங்களுக்கு நிதி உதவி வழங்கவும், எங்களை இரானுக்கு அனுப்ப உதவவும் கோரி மாவட்ட வருவாய் அலுவலர் எம். விஸ்வேஸ்வர நாயுடுவிடம் மனு அளித்துள்ளோம்," என்று சொல்மாஸ் மொஹம்மதி வியாழக்கிழமை காலை பிபிசியிடம் தெரிவித்தார்.

'இங்கு உறவினர்களோ, நண்பர்களோ இல்லை'

இரானில் இருந்து செய்திகள் வராததாலும், தனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததாலும் தான் மிகுந்த கவலையில் இருப்பதாக அவர் கூறினார். இதனால் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இரானில் உள்ள தங்களது குடும்பங்களின் நிலைமை என்னவென்று தெரியாததால், இந்த இக்கட்டான நேரத்தில் இங்கு இருப்பது கடினமாக இருப்பதாக அவர்கள் கூறினர். தங்களது மனுவில், தங்களை விரைவில் இரானுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"இந்தியாவில் எங்களுக்கு உதவி செய்ய உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை. அதனால்தான் நாங்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம்," என்று சொல்மாஸ் மொஹம்மதி பிபிசியிடம் கூறினார்.

மேலும், இரண்டு மாத காலத்திற்கு இந்திய அரசிடம் இருந்து தாங்கள் நிதி உதவியைக் கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது?

இரானிய இளம் பெண்கள் நிதி உதவி கோரி மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தது வெளிச்சத்திற்கு வந்ததும், பலர் அதற்குப் பதிலளித்தனர். அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இரானிய பெண்கள் வாடகைக்குத் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரிடமும், அவர்களது குழந்தைகள் பயிலும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் மாவட்ட அதிகாரிகள் பேசினர்.

வாடகை மற்றும் கட்டணம் தொடர்பாக அவர்கள் சாதகமாகப் பதிலளித்ததோடு, அவர்கள் விருப்பப்படி செலுத்தினால் போதுமானது என்று கூறியதாக மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வேஸ்வர நாயுடு பிபிசியிடம் தெரிவித்தார்.

"இரானிய பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இங்கு தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். சில நன்கொடையாளர்கள் அவர்களுக்கு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர்."

"அரசு சார்பாகவும் நாங்கள் உதவிகளை வழங்கி வருகிறோம். இரானில் நிலைமை சரியாகும் வரை, அவர்கள் அங்கு பாதுகாப்பாகச் செல்லும் வரை நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம்," என்று மாவட்ட வருவாய் அலுவலர் பிபிசியிடம் கூறினார்.

'இரானில் இந்திய மருந்தியல் சான்றிதழ்களுக்கு அதிக மதிப்பு'

"சர்வதேச பதற்றங்கள் காரணமாக தற்போது இரானில் சிக்கல்கள் நிலவுகின்றன. எனது கணவர் இரானில் ஒரு தனியார் வேலையில் இருக்கிறார். எனது தந்தை அங்கு ஒரு மருந்தகம் நடத்தி வருகிறார். அதனால்தான் நான் இங்கு பார்மசி படிப்பைப் படித்து வருகிறேன். இந்தப் படிப்பை முடித்தால், இரானில் எனக்கு நல்ல வேலை கிடைக்கும்."

"இந்தியாவின் பார்மசி படிப்பு மற்றும் சான்றிதழுக்கு இரானில் பெரும் மதிப்பு உள்ளது. இப்போது நாங்கள் படிப்பின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். ஆனால் போர் காரணமாக நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். இந்திய அரசு உதவினால், நாங்கள் படிப்பை முடித்துவிட்டு எங்கள் நாட்டிற்குத் திரும்புவோம்" என்று ஜெய்னப் மொஹம்மதி பிபிசியிடம் தெரிவித்தார்.

'கல்லூரிக் கட்டணம் செலுத்த எந்த அழுத்தமும் இல்லை' - நிர்வாகம்

இரானிய பெண்கள் பயிலும் கல்லூரிக்குச் சென்ற பிபிசி, அதன் நிர்வாகத்திடம் பேசியது.

"கல்லூரி கட்டணத்தைச் செலுத்தக் கோரி இரானிய மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அவர்களால் இயன்ற அளவு செலுத்தினால் போதும் என்றும் நாங்கள் தெரிவித்துள்ளோம்."

"தற்போது அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த கவலையில் உள்ளனர். இரானில் உள்ள அவர்களது குடும்பத்தினர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதே முதன்மையான பணி. அதன் பிறகு, அவர்கள் கல்லூரிக்குக் கட்டணம் செலுத்துவது குறித்து யோசிக்கலாம்," என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இரானிய மாணவர்களுக்கான நிதியுதவி

வியாழக்கிழமை மதியம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட அதிகாரிகள் இரானிய பெண்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

பிபிசி குழுவினரும் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

தங்கள் சூழ்நிலையை விளக்கி நிதி உதவி கோரிய இரானிய மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் எம். அபிஷேக் கிஷோர் சஞ்சீவனி நிதியில் (மாவட்ட நிர்வாகத்தின் நிவாரண நிதி) இருந்து 50,000 ரூபாயும், கனக மகாலட்சுமி கோவிலில் இருந்து 50,000 ரூபாயும் என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

மாவட்ட நிர்வாகம் செய்த இந்த உதவி தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாகவும், தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு, நிலைமை சீரானதும் படிப்பை முடித்துவிட்டு இரான் திரும்புவோம் என்றும் ஜெய்னப் மற்றும் சொல்மாஸ் தெரிவித்தனர்.

நன்கொடையாளர்கள் மற்றும் சில தனியார் அமைப்புகளும் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், அந்த உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் எம். விஸ்வேஸ்வர நாயுடு பிபிசியிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு