இங்கிலாந்திடம் ஹாட்ரிக் தோல்வி: இந்திய பேட்டர்களின் ஐபிஎல் பாணி அணுகுமுறையால் என்ன கிடைத்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மைக் பீட்டர்
- பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியாவுக்கு எதிரான தனது முதலாவது டி20 தொடர் வெற்றியை இங்கிலாந்து அணி உறுதி செய்துள்ளது. முழுமையாக விளையாடப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
பிரிஸ்டலில் நடந்த நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஃபில் சால்ட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இங்கிலாந்து 13.5 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது.
புரூக் 35 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். சால்ட் தனது முதல் ஒன்பது பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத போதிலும் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்ட பிறகு, மூன்று போட்டிகளில் மிகச்சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்தத் தொடர் தோல்விகள் ஜூன் மாத தொடக்கத்தில் இந்திய டி20 கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் மீது பெரும் அழுத்தத்தைக் ஏற்படுத்தியிருக்கிறது.
நான்காவதாக களம் இறங்கி 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்து ஷ்ரேயாஸ் ஒரு தரமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் சக வீரர்கள் சரிவர ஒத்துழைக்காததால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களையே எடுக்க முடிந்தது.
இந்த போட்டியிலும் இந்திய பேட்டர்களின் மோசமான ஃபார்ம் தொடர்ந்தது. 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே, 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கேப்டனைத் தவிர 19 ரன்களைத் தாண்டிய ஒரே பேட்டர் அவர்தான். வில் ஜாக்ஸின் பந்துவீச்சில் லாங்-ஆன் திசையில் டாம் பான்டனிடம் கேட்ச் கொடுத்து ஷிவம் துபே ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடர் சனிக்கிழமை சௌதாம்ப்டனில் நிறைவடைகிறது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக சாம்பியனான இந்தியா, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயலும்.

பட மூலாதாரம், Getty Images
ஷ்ரேயாசுக்கு சோதனை
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2023 க்குப் பிறகு ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.
ஷ்ரேயாஸ் 2024இல் ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தினார். அவர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2025இல் இரண்டாம் இடம் பிடித்தது.
அவர் பொறுப்பேற்ற முதல் சர்வதேச போட்டியில், இந்தியா முதல்முறையாக அயர்லாந்திடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியா தொடரையும் இழந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அடுத்த மூன்று போட்டிகளில் அவரது தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
ஓல்ட் டிராஃபோர்டில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, ட்ரெண்ட் பிரிட்ஜில் மோசமான சாதனையாக 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. பிரிஸ்டலில் இந்திய அணி தனது வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்திய பேட்டர்கள் பேட்டிங்கிற்கு சாதகமான ஐபிஎல் ஆடுகளங்களுக்கு வெளியே ரன் குவிக்க திணறுகின்றனர். வேகமாக ரன் குவிக்கும் ஐபிஎல் போலவே இந்திய பேட்டர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டனர்.
இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளும் பந்துகளை மேலே தூக்கி அடிக்கப்பட, கேட்சுகளாகவே அமைந்தன. இந்திய வீரர்கள் ஷார்ட் பந்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து திணறினர். இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் ஃபீல்டருக்கு நேரே பந்தை அடித்து ஆட்டமிழந்தனர்.
முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா கூறுகையில், இந்திய அணியிடம் பேட்டிங்கில் "எந்த திட்டமும் இல்லை" என்றும், இந்தியா இன்னிங்ஸின் கடைசி இரண்டு ஓவர்களில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் "அவர்களின் ஆட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் கூறினார்.
இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்தின் பேட்டர்களின் ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
டி20ல் இங்கிலாந்தின் வீறுநடை தொடர்கிறது
நியூசிலாந்திற்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது எதிர்காலம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் தனது தோள்களில் இருந்து சுமை இறங்கியதாக உணரலாம்.
அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து டி20 அணி கடைசி 22 போட்டிகளில் 19 இல் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 தொடர் வெற்றியை இங்கிலாந்து பெற்றுள்ளது.
ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து சார்பில் அதிக ரன் குவித்தவராக சால்ட் இருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் ஒரு மெய்டன் தொடக்க ஓவரை எதிர்கொண்ட போதிலும், அவர் மீண்டும் ஃபார்மில் இருந்தார்.
மூன்றாவது ஓவரில் புரூக் அவருடன் இணைய, இந்த ஜோடி பவர்பிளே முடிவில் 62-1 ரன்களை எட்டியது. அடுத்தபடியாக வேகமாக ஆடி, எட்டு முதல் பத்தாவது ஓவர்களில் 52 ரன்களை எடுத்து போட்டியை இந்தியாவின் பிடியில் இருந்து மாற்றியது.
வாஷிங்டனின் எட்டாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை புரூக் விளாசினார். புரூக் தனது அதிவேக இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகளை அடித்தார்.
இங்கிலாந்து பேட்டர்களில் ஜோஸ் பட்லர் மட்டுமே ஆட்டமிழந்தார், அவர் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களுக்கு வெளியேறினார்.
35 வயதான அவரின் ஃபார்ம் இங்கிலாந்துக்கு ஒரே கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். அந்த ஓப்பனர் தற்போது தனது கடைசி 18 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 15.16 சராசரியைக் கொண்டுள்ளார். அதில் அதிகபட்ச ஸ்கோர் 39 ஆகும்.
சனிக்கிழமை நடைபெறும் கடைசிப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங்கிற்கு இங்கிலாந்து ஓய்வு அளிக்கக் கூடும். இதில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து டி20 உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































