காணொளி: 'ஓடி ஒளிஞ்சுட்டானு பேசுவதா?' - கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு
கரூர் சம்பவம் நடந்தபோது காவல்துறை போதிய பாதுகாப்பு தரவில்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதை தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் வேலுசாமிபுரம் என்ற இடத்தில் வாகன பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.
தனது பரப்புரைக் கூட்டத்தில் பெரும் துயரம் நடந்ததும், அப்போது மருத்துவமனைக்கு செல்லாமல் விஜய் விமானத்தில் சென்னை திரும்பியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
விஜய் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததே நடந்த துயரத்திற்கு காரணம் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு காணொளி வெளியிட்ட விஜய், அதன் பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பேசி, இழப்பீடு வழங்கிய விஜய், அதன்பின்பு கரூருக்கு செல்லவில்லை. இதுவும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காகவும் விஜய் கரூருக்கு செல்லவில்லை.
இந்நிலையில் ஒன்பது மாதங்கள் கழித்து இன்று அவர் கரூர் சென்றுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



