நடிகை அனுபமா கூறும் 'நார்சிஸிஸ்ட்' யார்? ஆண் - பெண் உறவில் தோன்றும் 5 அறிகுறிகள் மற்றும் தீர்வு

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 26 வயதான சுவேதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவம் இது.
"என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர் அவர். தொடக்கத்தில் அதீத பாசம் காட்டினார். இருவரும் பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கிய பிறகு அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நடை, உடை என அனைத்திலும் அவர் சொல்வதைக் கேட்கும் நிலை ஏற்பட்டது" என்கிறார் அவர்.
"என்னுடைய சுதந்திரம் பறிபோவதை உணர்ந்த பிறகே அந்த உறவில் இருந்து வெளியேறினேன்" என அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்ற அனுபவத்தை பகிர்ந்துகொண்ட கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், "நாம் நினைப்பதைச் செய்ய முடியாது. பாதுகாப்பாக இருப்பார் என நினைத்தேன். ஆனால், மோசமான அனுபவங்களையே எதிர்கொள்ள நேரிட்டது" என்கிறார்.
இதேபோன்று தன்னுடைய காதல் உறவிலும் "மோசமான அனுபவம்" ஏற்பட்டதாக, பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக அந்த உறவால் வலியை அனுபவித்ததாக கூறியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறிய நார்ஸிசம் (Narcissism) என்ற வார்த்தை, அண்மையில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
ஆண்-பெண் உறவில் நார்ஸிசம் ஏன் வருகிறது? இதனை எவ்வாறு கண்டறிவது? தீர்வு என்ன?
'இரண்டு வருட வலி அது'
கேரளாவில் உள்ள யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி நடிகை அனுபமா பரமேஸ்வரன் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனக்கு "மோசமான காதல் அனுபவம்" ஏற்பட்டதாக சில விஷயங்களை அவர் பகிர்ந்திருந்தார். அந்நபர் யாரென்று அவர் வெளிப்படுத்தவில்லை.
தமிழில் நடிகர் தனுஷுடன் 'கொடி', பிரதீப் ரங்கநாதனுடன் 'டிராகன்', துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் பிரபல நடிகையாக உள்ளார்.

பட மூலாதாரம், AnupamaParameshwaran
"இரண்டு ஆண்டுகளாக நீடித்த வலி அது. ஒவ்வொரு நாளும் அழுதேன். இது ஒருவித வேடிக்கையான விளக்கமாக இருக்கலாம். ஒருநாள் ரெமோவாக இருப்பார். அவரது அன்பைப் பார்த்து நம் வாழ்க்கையில் இவர் கிடைத்தது அதிர்ஷ்டம் என நினைப்பேன். ஆனால், மறுநாள் அவர் அந்நியனாக மாறிவிடுவார். உங்களை யாராவது அடிப்பதற்கு வந்தால்கூட அவர் தலையைத் திருப்பிப் பார்க்க மாட்டார். மறுநாள் அம்பியாக மாறிவிடுவார்" என்கிறார் அவர்.
"அம்பியாக மாறி மன்னிப்பு கேட்பார். கெஞ்சுவார். சத்தியம் செய்வார். மீண்டும் இதைச் செய்ய மாட்டேன் என குழந்தை போல அழுவார். ஆனால், மீண்டும் அதுவே தொடர்ந்து நடக்கும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்நியன் படத்தில் வரும் (மிகுந்த காதல் உணர்வுள்ள) ரெமோ , (மற்றவர்களை துன்புறுத்தி கொல்லும்) அந்நியன் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
முன்னதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமாக இருப்பதைப் போன்ற காணொளி ஒன்றைப் பகிர்ந்து சில வரிகளை அனுபமா பரமேஸ்வரன் எழுதியிருந்தார்.
அந்தப் பதிவில், 'சில சமயங்களில் நிம்மதியை அடைவதற்கு பயனற்ற பாதைகளைக் கைவிட வேண்டியது வரும். இன்று அந்த நிம்மதி என்னைத் தேடி வந்தது. என்னுடைய குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்வு செய்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று அவர் பதிவிட்டிருந்தார்.
'என்னை மீண்டும் என்னிடமே அழைத்து வந்த பிரபஞ்சத்துக்கு நன்றி' எனவும் அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
இதனை நேர்காணலில் குறிப்பிட்ட அவர், "உடல்ரீதியாகவும் மனதளவிலும் இரண்டு வருட வலியின் வெளிப்பாடாக அந்தப் பதிவை வெளியிட்டேன். சில காலமாக சமூக வலைதளங்களிலும் நான் இல்லை. நான் தயாரான பிறகு திரும்பி வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்" எனக் குறிப்பிட்டார்.
"உறவில் இருக்கும்போது நார்சிஸிஸ்டிக் நபர் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வார். அதனை ஒரு உத்தியாகவே அவர் கையாண்டார்" என அனுபமா பரமேஸ்வரன் கூறியிருந்தார்.
நார்சிஸிஸ்ட் யார்?

பட மூலாதாரம், Getty Images
"தன் மீது சுயமோகம் அதிகம் உள்ளவர்களை நார்சிஸிஸ்ட் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களை சுயமோகம் கொண்ட ஆளுமைக் கோளாறு (Narcissistic Personality Disorder (NPD)) என மனநல மருத்துவம் வகைப்படுத்துகிறது" என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
"எதைச் செய்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது இவர்களின் குணமாக உள்ளது. தொழில், குடும்பம், காதல் ஆகியவற்றில் பிரச்னை வரும்போது நார்சிஸம் என்பது பேசப்படுகிறது" என்கிறார் அவர்.
"தனது இணையின் சாதனைகள், தியாகம், பங்களிப்பு, பாசம் ஆகியவற்றை நார்சிஸிஸ்ட் குணம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை" என்கிறார், மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
"நார்சிஸிஸ்ட் என்பது அனைவரும் பயன்படுத்தக் கூடிய பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது" என்கிறார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
'கணவர் சரியில்லை', 'ஆண் நண்பரின் செயல்பாடு சரியில்லை' எனப் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
'சுதந்திரம் பறிபோவதை உணர்ந்தேன்'
"காதலிக்கத் தொடங்கிய பிறகே இதுபோன்ற குணங்கள் வெளியில் தெரியத் தொடங்குகின்றன. நடை, உடை என அனைத்திலும் அந்த நபரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. உறவில் இருந்து வெளியேறிவிட்டாலும் அதன் பாதிப்பு இன்னும் அகலவில்லை" என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுவேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த நான்காண்டுகளாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவருக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதில் உறுதியாக இருப்பார். அதை உணர்வுபூர்வமாக நடந்து கொள்வதாக நினைப்பேன். ஆனால் எனக்கு எதாவது தேவை ஏற்படும் நேரத்தில் அவர் வரமாட்டார்" என்கிறார் அவர்.
"காதலிக்கத் தொடங்குவதற்கு முன்பு வேலை, வீடு என யாரையும் சாராத வாழ்க்கை முறையில் இருந்தேன். தொடக்கத்தில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால், நாளடைவில் அவரைச் சார்ந்து இருக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தினார்" என அவர் குறிப்பிட்டார்.
"வெளியில் தோழிகளுடன் சுற்றுலா செல்வது, திரைப்படம் பார்க்கச் செல்வது, தேவையான பொருட்களை வாங்குவது என சுயமாக எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியவில்லை. சுதந்திரம் பறிபோவதை உணர்ந்தேன்" என்கிறார் சுவேதா.
'இன்றளவும் பாதிப்பு தொடர்கிறது'

பட மூலாதாரம், Getty Images
ஒருகட்டத்தில் இதை முதிர்ச்சியோடு அணுக வேண்டும் என்று முடிவெடுத்ததாகக் கூறும் அவர், "ஆனால், அந்த நபரிடம் இருந்து பிரிந்துவிடுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒருகட்டத்தில் நச்சு உறவு (Toxic) என்பதை உணர்ந்து முழுமையாக வெளியில் வந்துவிட்டேன்" எனக் கூறுகிறார்.
"சுமார் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே நீடித்த அந்த உறவு காரணமாக மனரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டேன். அது இன்றளவும் தொடர்கிறது" என்கிறார் அவர்.
தற்போது புதிதாக சந்திக்கும் எந்தவொரு ஆணும் பாசமாக பேசத் தொடங்கினாலே, 'இந்த உறவு வேண்டாம்' என விலகும் எண்ணம் தானாக தோன்றிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவையைச் சேர்ந்த மருத்துவர் மோகனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏற்பட்ட அனுபவம் சற்று வித்தியாசமானது.
"சக மருத்துவர் ஒருவரை விரும்பிக் காதலித்தேன். காதலிக்கத் தொடங்கிய பிறகு சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியவில்லை. நமக்கு பாதுகாப்பாக இருப்பார் எனத் தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால், எப்போதும் அச்ச உணர்விலேயே வைத்திருந்தார்" என்கிறார் அவர்.
"எங்காவது சுற்றுலா சென்றால், 'என்னை மறந்துவிட்டு எப்படிப் போக முடிகிறது?' எனக் கேள்வி கேட்பார். சம்பளம், வசதி வாய்ப்பில் அவரைவிட ஒருபடி முன்னேறிவிட்டால் ஏற்க மாட்டார். அதை சீர்குலைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டினார்" என்கிறார் மருத்துவர் மோகனா.
'பழையபடியே தொடர்ந்தன'
"ஒருகட்டத்தில் காதலை முறித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பேசினேன். 'நீ இல்லாமல் வாழ முடியாது' என அழுதார். இதனால் மனமிறங்கி மீண்டும் பேசத் தொடங்கினேன். ஆனால், பழையபடியே அவரது நடவடிக்கைகள் தொடர்ந்தன" என அவர் கூறுகிறார்.
"தன்னைப் பற்றிய எண்ணம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும். தான் சந்தோஷமாக இருந்தால் போதும் என்பது தான் அவர்களின் ஒரே நோக்கம். வெளியில் ஒரு வாழ்க்கை, தனி வாழ்வில் வேறு வாழ்க்கை என அவர்கள் வாழ்வார்கள்" என்கிறார் மருத்துவர் மோகனா.
தொடர்ந்து பேசிய அவர், "நார்சிஸ பிரச்னைகளைப் பொறுத்தவரை அதனை உருவாக்கும் நபருக்கு மட்டும் அல்ல. அவரால் பாதிப்படையும் துணைக்கும் மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அந்தளவுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது" எனக் கூறுகிறார்.
கண்டறியும் 5 வழிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இதனைக் கண்டறியும் வழிமுறைகளை மருத்துவர் மோகன வெங்கடாசலபதி பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.
- அளவுக்கு மீறி காட்டப்படும் உரிமை
- தன்னால் மட்டுமே சாத்தியம் என எதிர் பாலினத்தவருக்குக் காட்டிக் கொள்ள முனைவது
- எங்கு போக வேண்டும்? யாருடன் பேச வேண்டும் எனக் கட்டுப்படுத்துவது
- தனி உரிமையை மீறும் செயல்களில் ஈடுபடுவது
- சுதந்திரம் பறிபோனதாக எதிர் பாலினத்தவர் உணரும் நிலை
'சிவப்பு சமிக்ஞையின் (Red flag) அறிகுறி'
"தற்போது செல்போன் தான் பிரச்னையாக உள்ளது. உறவுகள் தொடங்குவது முதல் உறவுகள் முடிவுக்கு வருவது வரை செல்போனை மையப்படுத்தியே உள்ளது. சந்தேகம் அதிகரிப்பதற்கும் இது பிரதான காரணமாக உள்ளது" என்கிறார், மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
மனநல ஆலோசனைக்கு வந்த செவிலியர் ஒருவர் குறித்து விவரித்த மருத்துவர் பூர்ணசந்திரிகா, "பெண்ணின் செல்போனில் உள்ள ஆண்களின் தொடர்பு எண்களை எடுத்த அவரது காதலர், 'அவருடன் உனக்கு என்ன தொடர்பு?' என அவர்களிடம் கேட்டுள்ளார். அது தவறு என அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை" என்கிறார்.
"இரண்டு பேருக்கும் இடையில் நம்பிக்கை என்பது முக்கியமானது. ஆனால், இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது" எனக் கூறும் அவர், "தன் மீது மிகவும் பாசமாக இருப்பதால் அதீத பற்று காட்டுவதாக (possessive) பெண்கள் நினைக்கின்றனர். இது சிவப்பு சமிக்ஞையின் (Red flag) அறிகுறி" என்கிறார்.
"ஒருவரை சார்ந்து இன்னொருவரின் வளர்ச்சி இருக்கக் கூடாது. இரு தரப்பிலும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அது இல்லாத எந்தவொரு உறவும் தேவையா என யோசிக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
"பெண்கள் மத்தியில் நார்சிஸ அறிகுறிகள் தென்படுவதில்லையா?" எனக் கேட்டபோது, " பெண்களிடம் நார்ஸிசம் இருக்கிறதா என்பதைவிட ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது" என்கிறார் அவர்.
தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஒருவர் நார்சிஸ மனநிலையில் இருப்பதை அறிந்த பிறகு அதற்கான தீர்வு குறித்து விவரிக்கும் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி, " தனக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளது என்பதை ஒருவர் அறிந்த பிறகு மனநல மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார்.
"தொடர் பயிற்சிகள் மூலம் அவரது எண்ண ஓட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிகிச்சையை (Cognitive behavioral therapy) மேற்கொள்ளும்போது எண்ண ஓட்டம் மாறும்" எனக் கூறும் அவர், " இதனைக் கண்டுகொள்ளாவிட்டால் அதிதீவிர ஆளுமைக் கோளாறுகள் ஏற்பட்டு மூர்க்கத்தனம் ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.
"சைக்கோ தெரபி எனப்படும் பேச்சுவழி மருத்துவம் மட்டுமின்றி தேவைப்பட்டால் மனநல மருந்துகளும் கொடுத்தால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்" என்கிறார், மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
விலகுவதற்கான வழிகள் என்ன?
இத்தகைய நபர்களை காதலிப்பவர்கள் அவர்களிடமிருந்து விலகுவதற்கான வழிகளை மோகன வெங்கடாசலபதி பகிர்ந்துகொண்டார்.
- காதலிக்கும்போது 'ஆம்' என எவ்வளவு விரைவாக கூறுகிறார்களோ அதே அளவு 'நோ' எனக் கூறிவிட்டு விலகும் பக்குவம் வரவேண்டும்.
- தன் மீது அதீத பற்று காட்டுவதை (Possessive) அக்கறை (caring) என்று கருதக் கூடாது. பரஸ்பர வளர்ச்சி இல்லாவிட்டால் விலகிவிட வேண்டும்.
- தங்களால் முடியும் என்றால் நச்சுத்தன்மை நடத்தைகளை (Toxic relatiionship) காதல் உறவில் உள்ளவர்கள், கணவன்-மனைவி ஆகியோர் பேசி சரிசெய்ய முயல வேண்டும்.
- இரு தரப்புக்கும் இடையில் நம்பிக்கை முக்கியம். அது சிதையும்போது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
- காலப்போக்கில் திருந்திவிடுவார்கள் எனக் கருதி கண்டுகொள்ளாமல் இருப்பது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கும். அது பல்வேறு தவறான முடிவுகளுக்குக் கொண்டு செல்லும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































