செளதி இளவரசரின் வருகை: பல பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வருமா?

இந்திய பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றவுடன், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவும் செளதி அரேபியாவும் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மோதி ரியாத் சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு நாடு சுற்றுப் பயணமாக முடி இளவரசர் முகமது பின் சல்மான் புது டில்லிக்கு பிப்ரவரி 19 மற்றும் 20ஆம் தேதி வருகிறார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளின் உறவு நெருக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - செளதி அரேபியா உறவு

கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரிதும் செளதி அரேபியாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் நான்கில் ஒரு சதவிகிதம் செளதியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே 2018 - 2019ஆம் ஆண்டு மட்டும் 87 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருக்குமென கணக்கிடப்படுகிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்து செளதிதான் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி.

ஆனால் இந்த நெருக்கம் வர்த்தகத்தை கடந்து முன்னேற்றமடையவில்லை என்கிறார்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தை அவதானிப்பவர்கள்.

இருதரப்பு உறவு ஸ்திரமாக இருந்தாலும், அந்த உறவு வாங்குபவர், விற்பவர் என்ற நிலையில்தான் உள்ளது என்கிறார் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கமால் பாஷா.

பாகிஸ்தான் - செளதி - இந்தியா

இந்தியா பாகிஸ்தான் உறவை காட்டிலும், இந்தியா செளதியின் உறவு நன்றாகவே உள்ளது. முழுக்க முழுக்க செளதி இந்தியாவின் பக்கம் திரும்புமா? என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது.

இதற்கு காரணமும் இருக்கிறது.

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, "இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது".

"டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி" என்கிறார்.

"இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழங்குமா என்று உறுதியாக தெரியாது" என்கிறார்.

காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது.

ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது.

வர்த்தகம்

இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது.

ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை.

அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா செளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது.

பேராசிரியர் பாஷா, "செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.

இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை.

செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது.

இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும்.

இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும்.

ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை.

"பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது" என்கிறார் பாஷா.

பகை நாடுகள்

இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது.

கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள்.

இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு.

செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா?

"நட்பு நாடுகளை சமமாக நடத்தி வருகிறது இந்தியா.இந்திய வெளியுறவு கொள்கையில் உடனே எந்த மாற்றமும் வராது" என்கிறார் பேராசிரியர் பாஷா.

தற்போதைய இந்திய செளதி உறவானது, அந்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள், இரு தரப்பு வர்த்தகம், முதலீடு இதனை சார்ந்தே இருக்கிறது.

முடியரசரின் வருகை பெரும் முதலீட்டை கொண்டு வருமென இந்தியா நம்புகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :