"புற்றுநோய்க்கு எதிராக உடலின் சக்தி": இம்யூனோதெரபி எப்படி உயிர்களை காப்பாற்றுகிறது?

புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள மற்ற ஆரோக்கியமான செல்களைப் போலவே தோற்றமளிக்கலாம், எனவே அவற்றை அடையாளம் காண நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குச் சில வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம்.

பட மூலாதாரம், Emmanuel Lafont/ BBC

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு, புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் சிகிச்சைகள் முதிர்ச்சியடைந்து வருகின்றன - மேலும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகின்றன.

71 வயதான மௌரீன் சிடெரிஸ் 2008-இல் பெருங்குடல் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றபோது, அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவரது சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது, ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குணமடையும் செயல்முறை மிகவும் கடினமாக இருந்தது.

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க்கில் வசிக்கும் சிடெரிஸிற்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது - இந்த முறை, ஒரு மருத்துவ பரிசோதனை மூலம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும், அவர் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டருக்கு 'டோஸ்டார்லிமாப்' என்ற மருந்தின் 45 நிமிட உட்செலுத்தலுக்காகப் பயணம் செய்தார்.

வெறும் நான்கு மாத சிகிச்சைக்குப் பிறகு, சிடெரிஸின் கட்டி மறைந்துவிட்டது - அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை எதுவுமின்றி இது சாத்தியமானது. அவருக்கு ஏற்பட்ட ஒரே பெரிய பக்கவிளைவு சோர்வை உண்டாக்கும் அட்ரீனல் பற்றாக்குறை மட்டுமே. "இது நம்பமுடியாதது," என்று அவர் கூறுகிறார். "இது கிட்டத்தட்ட ஓர் அறிவியல் புனைகதை போல இருக்கிறது."

ஆனாலும், இது உண்மை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வளர்ச்சிக்குப் பிறகு தற்போது வேகமெடுத்து வரும் புற்றுநோய்க்கான 'இம்யூனோதெரபி' (immunotherapy) மூலம் பயனடையும் நோயாளிகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கையில் சிடெரிஸும் ஒருவர். இதனுடன் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை (personalised therapy), நீண்ட கால புற்றுநோய் நிவாரணம் மற்றும் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற பிற சிகிச்சைகளை விடக் குறைவான பக்கவிளைவுகள் ஆகிய வாக்குறுதிகளும் வருகின்றன.

"எனக்குத் தொண்டை அடைக்கிறது, உடல் சிலிர்க்கிறது," என்கிறார் டெக்சாஸில் உள்ள எம்டி ஆண்டர்சன் கேன்சர் சென்டரின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பேராசிரியரும் இம்யூனோதெரபி ஆராய்ச்சியாளருமான ஜெனிஃபர் வார்கோ. "நோயாளிகள் வாழ்கிறார்கள், நல்ல தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் இப்போது குணப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறோம்."

"உடல் அல்லாதது போல் தோன்றும் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் இயல்பான திறன் உடலுக்கு உண்டு," என்று இம்யூனோதெரபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமெரிக்க இலாப நோக்கற்ற அமைப்பான 'பார்க்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் கேன்சர் இம்யூனோதெரபி'யின் தலைமை நிர்வாகி கரேன் நுட்சன் விளக்குகிறார். அனைத்தும் சரியாக வேலை செய்தால், அதில் புற்றுநோயாக மாறிய செல்களும் அடங்கும். ஆனால் சில நேரங்களில், புற்றுநோய் செல்கள் அந்த அமைப்பை தவிர்க்கின்றன அல்லது ஏமாற்றுகின்றன, இது ஆபத்தான கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அவை தங்களைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்களிலிருந்து வேறுபடுத்த முடியாதபடி, வெளிப்படையாகவே மறைந்திருக்கின்றன.

இம்யூனோதெரபியின் குறிக்கோள், அந்தப் புற்றுநோய் செல்களை அடையாளம் காட்டி, நோய் எதிர்ப்பு மண்டலம் அவற்றை உணரச் செய்வதாகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, இதனால் புற்றுநோய் செல்களைக் கண்டுபிடித்து அழிக்க முடியும் - இது சாத்தியமான வியக்கத்தக்க முடிவுகளைத் தரும்.

இன்று இம்யூனோதெரபி புற்றுநோயை எவ்வாறு எதிர்கொள்கிறது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இம்யூனோதெரபியின் மிகவும் பிரபலமான இரண்டு வடிவங்கள் 'CAR T-செல்' சிகிச்சைகள் மற்றும் 'இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள்' ஆகும். CAR T-செல் சிகிச்சைகள் என்பது ஒரு நோயாளியின் இரத்தத்திலிருந்து டி செல்களை (வெளியிலிருந்து வரும் ஊடுருவல்களை வேட்டையாடி அழிக்கும் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு செல்கள்) பிரித்தெடுத்து, அவற்றை ஆய்வகத்தில் மாற்றி, புற்றுநோய் செல்களைத் தாக்கும் வகையில் தயார் செய்து மீண்டும் உடலுக்குள் செலுத்துவதாகும். இந்தச் சிகிச்சைகள் தற்போது இரத்த புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இயல்பாக உள்ள "ஆஃப்" சுவிட்சைச் செயலிழக்கச் செய்யும் மருந்துகளாகும். இந்த பாதுகாப்பு அம்சம் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளது - இது ஆரோக்கியமான செல்களைச் சேதப்படுத்தும் மிகக் கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளைத் தடுக்கிறது. இருப்பினும், சில புற்றுநோய் செல்கள் இந்த ஆஃப் சுவிட்சைத் தட்டிவிடலாம், இதனால் டி செல்கள் பின்வாங்கிவிடும், அதனால் அவை கண்டறியப்படுவதிலிருந்து தப்பித்துவிடும். இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள் இது நடப்பதைத் தடுக்கின்றன, அதாவது டி செல்கள் புற்றுநோய் செல்களை ஒரு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டு தாக்குதலைத் தொடங்குகின்றன. இந்த கண்டுபிடிப்பிற்கு முன்னோடியாக இருந்த விஞ்ஞானிகள் 2018-இல் நோபல் பரிசு வென்றனர், இன்று இந்த மருந்துகள் பல புற்றுநோய் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இரண்டு முறைகளுக்கும் வரம்புகள் உள்ளன. ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தாலும், புதிய நோயறிதல்களில் 90%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும் 'திடமான கட்டிகளுக்கு' (solid tumours) எதிராக (இரத்த புற்றுநோய்களுக்கு மாறாக) CAR T-செல் சிகிச்சைகளைச் செயல்பட வைப்பதில் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இந்தச் சிகிச்சையை வழங்குவது விலை உயர்ந்தது மற்றும் அதிக உழைப்பு தேவைப்படுவதுமாகும்.

புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள மற்ற ஆரோக்கியமான செல்களைப் போலவே தோற்றமளிக்கலாம், எனவே அவற்றை அடையாளம் காண நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குச் சில வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம்.

பட மூலாதாரம், Emmanuel Lafont/ BBC

படக்குறிப்பு, புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள மற்ற ஆரோக்கியமான செல்களைப் போலவே தோற்றமளிக்கலாம், எனவே அவற்றை அடையாளம் காண நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குச் சில வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம்.

லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் சம்ரா துராஜ்லிக் கூறுகையில், இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள் "பலவகையான பக்கவிளைவுகளை" கொண்டு வரக்கூடும். ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆஃப்-சுவிட்சுகள் உடல் தனது சொந்த திசுக்களையே தாக்குவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை, எனவே அந்தப் பாதுகாப்பை நீக்குவது கட்டிகளுடன் சேர்த்து புற்றுநோய் அல்லாத செல்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம். அமெரிக்கத் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின்படி, பொதுவான பக்கவிளைவுகளில் தோல் வெடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும், அரிதான சந்தர்ப்பங்களில் இது கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மருந்து ஒரு தீவிரமான புற்றுநோயைக் கட்டுப்படுத்துமானால், அந்தப் பாதிப்புகளை நாம் சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது எப்போதும் அப்படி வேலை செய்வதில்லை. முழு புற்றுநோயியல் துறையும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்சினை என்னவென்றால், எந்த இம்யூனோதெரபியும் 100% பெறுநர்களிடம் வேலை செய்வதில்லை என்று துராஜ்லிக் கூறுகிறார். கட்டியின் அமைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தால் அதை அணுகுவதைக் குறைப்பது முதல், நோய் எதிர்ப்பு செல்களின் பண்புகள் வரை இதற்குப் பல சாத்தியமான காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாக, 20% முதல் 40% நோயாளிகள் இம்யூனோதெரபியால் பயனடைகின்றனர். அதாவது, உண்மையில் பெரும்பான்மையான நோயாளிகள் பெரிய பலன்கள் எதுவுமின்றி, பக்கவிளைவுகளுக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்கிறார்கள்; அதோடு வீணடிக்கப்பட்ட நேரம் மற்றும் நம்பிக்கை பற்றியும் சொல்ல வேண்டியதில்லை.

பலமுனை அணுகுமுறைகள்

அதிகப்படியான நோயாளிகள் இம்யூனோதெரபி மூலம் எப்படிப் பயனடையலாம்? ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரச்சினையை பல வெவ்வேறான கோணங்களில் இருந்து அணுகி வருகிறார்கள்.

வார்கோவின் ஆராய்ச்சி, ஆரம்பகட்ட நிலையில் இருந்தாலும், அதிக நார்ச்சத்து உள்ள உணவைப் பின்பற்றும் நோயாளிகள், குடல் நுண்ணுயிரிகளில் (gut microbiome) ஏற்படும் மாற்றங்கள் மூலம் சிறந்த முடிவுகளைக் காணலாம் என்று தெரிவிக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் கட்டி ஆகிய இரண்டையுமே பாதிக்கலாம். மற்றொரு ஆச்சரியமான ஆராய்ச்சி என்னவென்றால், விலைகுறைந்த மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கொழுப்பைக் குறைக்கும் 'ஸ்டேடின்' மருந்துகள், செல் தொடர்புகளில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்கள் மூலம் இம்யூனோதெரபியின் விளைவுகளை மேம்படுத்தலாம் எனக் காட்டுகிறது. சிகிச்சையின் நேரம் கூட முக்கியமாக இருக்கலாம்; சமீபத்திய சில ஆராய்ச்சிகள் அதிகாலையில் மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், பின்னர் சிகிச்சை பெறுபவர்களை விடச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

கதிர்வீச்சு அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற பிற புற்றுநோய் சிகிச்சைகளுடன் இம்யூனோதெரபியை இணைப்பது, பலன் அளிக்கும் விகிதத்தை அதிகரிப்பதற்கான மற்றொரு வழியாக இருக்கலாம். "கதிர்வீச்சு உண்மையில்... கட்டியை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் புலப்படும்படி செய்யும்," என்று வெயில் கார்னெல் மருத்துவ மையத்தைச் சேர்ந்த சாண்ட்ரா டெமரியா விளக்குகிறார், இவர் இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை குறித்து ஆராய்ச்சி செய்தவர். கட்டிகளைத் தாக்க அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் அல்ட்ராசவுண்ட் சிகிச்சையும் இதேபோலச் செய்யக்கூடும்.

மற்ற ஆராய்ச்சியாளர்கள் இம்யூனோதெரபியின் தனிப்பயனாக்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் மற்றும் நோயாளிகளுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சையைத் துல்லியமாகப் பொருத்த முயல்கின்றனர்.

தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் பல துறைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் புற்றுநோயின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இது புற்றுநோயியல் துறைக்கு மிகவும் முக்கியமானது என்று நுட்சன் வலியுறுத்துகிறார். "புற்றுநோய் என்பது ஒற்றை நோயல்ல," என்று நுட்சன் கூறுகிறார். "இது 200 வெவ்வேறு நோய்கள், அவை அனைத்தும் வெவ்வேறு காரணங்களால் உருவாகின்றன மற்றும் அவற்றை வெவ்வேறு விதமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்." ஒரே வகையான மற்றும் ஒரே நிலையில் புற்றுநோய் உள்ள இரண்டு நோயாளிகளுக்குக் கூட செல் மட்டத்தில் வெவ்வேறு நோய்கள் இருக்கலாம்.

"துறை ஒரு திருப்புமுனையில் உள்ளது," என்று டெமரியா கூறுகிறார். "நாம் இப்போது புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு, உண்மையில் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு நகர முடியும்."

மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒரு நம்பிக்கைக்குரிய உத்தியைச் சோதித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட மரபணு சுயவிவரத்தைக் கொண்ட கட்டிகள் டோஸ்டார்லிமாப் போன்ற இம்யூன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்களுக்குச் சிறப்பாகப் பலனளிக்கும் என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில் இது அமைந்தது. 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறிய சோதனைகளில், இந்தத் தன்மையைக் கொண்ட மலக்குடல் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளித்தபோது, அந்தச் சிகிச்சை கட்டிகளை முற்றிலுமாக அழித்தது. பின்னர் அந்தக் குழு தனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தி, அதே மரபணு அடையாளத்தைக் கொண்ட உணவுக்குழாய், சிறுநீர்ப்பை மற்றும் வயிறு உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டிகளைக் கொண்ட 117 நோயாளிகளை உள்ளடக்கியது. முழு சிகிச்சையை முடித்த 103 பேரில், சிடெரிஸ் உட்பட 84 பேருக்குக் கட்டிகள் முழுமையாக மறைந்தன, வெறும் இருவருக்கு மட்டுமே கூடுதல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

எம்டி ஆண்டர்சன் ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட ஒரு செக்பாயிண்ட் இன்ஹிபிட்டரைப் பயன்படுத்தும் அணுகுமுறைக்கு இதேபோன்ற முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற குழுக்கள் - நோயாளிகள் இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் - கட்டிகள் முதலில் இம்யூனோதெரபி மூலம் தாக்கப்பட்டால், குறைந்தபட்சம் சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்பதைக் காட்டியுள்ளனர்.

அதிக ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும், இத்தகைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கையளிக்கின்றன, ஏனெனில் அவை குறைவான ஊடுருவல் கொண்ட அதேசமயம் மிகவும் பயனுள்ள சிகிச்சை யுகத்திற்கு வழிவகுக்கின்றன என்று மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் திடமான கட்டி புற்றுநோயியல் பிரிவின் தலைவர் லூயிஸ் டயஸ் கூறுகிறார். "நாம் இடைக்காலத்திலிருந்து நவீன காலத்திற்கு நகர வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "உங்கள் மலக்குடல் அல்லது உங்கள் வயிறு அல்லது சிறுநீர்ப்பையை அகற்றுவதற்குப் பதில் - நாம் அதைவிடச் சிறந்ததைச் செய்ய வேண்டும்."

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சுமார் 5% கட்டிகள் மட்டுமே டயஸ் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வு செய்த அறுவை சிகிச்சை இல்லாத இம்யூனோதெரபி சிகிச்சைக்கு ஏற்ற மரபணு அமைப்பைக் கொண்டுள்ளன. "மற்ற 95%-க்கும் இது போன்ற சிறப்பான ஒன்று தேவை," என்று அவர் கூறுகிறார்.

புற்றுநோய் தடுப்பூசிகளின் வாக்குறுதி

அதற்காக, ஆராய்ச்சியாளர்கள் புதிய இம்யூனோதெரபி அணுகுமுறைகளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர் மற்றும் புற்றுநோய் தடுப்பூசிகள் போன்ற பழைய முறைகளை மேம்படுத்த முயல்கின்றனர்.

பாரம்பரிய தடுப்பூசிகள் வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளின் பகுதிகளை உடலுக்கு அறிமுகப்படுத்துகின்றன, இதனால் உடல் உண்மையான நோய்க்கிருமியை எதிர்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தயார் செய்ய முடியும். இதேபோன்ற ஒரு கருத்து புற்றுநோயிலும் செயல்படக்கூடும் என்று நுட்சன் கூறுகிறார் - ஆனால் இது நோயைத் தடுப்பதற்குப் பதிலாக சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதுதான் வித்தியாசம்.

தனிப்பயனாக்கப்பட்ட இம்யூனோதெரபிகள் மூலம், மருத்துவர்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பை அதிகத் துல்லியத்துடன் சிறப்பாகச் செயல்படுத்த முடியும், இது புற்றுநோய் முற்றிலும் குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Emmanuel Lafont/ BBC

படக்குறிப்பு, தனிப்பயனாக்கப்பட்ட இம்யூனோதெரபிகள் மூலம், மருத்துவர்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பை அதிகத் துல்லியத்துடன் சிறப்பாகச் செயல்படுத்த முடியும், இது புற்றுநோய் முற்றிலும் குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

புற்றுநோய் செல்கள் பல்வேறு மேற்பரப்பு புரதங்களால் சூழப்பட்டுள்ளன. தடுப்பூசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இந்தப் புரதங்களை அடையாளம் கண்டு இலக்கு வைக்கப் பயிற்சியளிக்க முடியும், இது அவர்களின் குறிப்பிட்ட புற்றுநோய்க்கு எதிராக வலுவான எதிர்வினையைத் தூண்டும் என்று நுட்சன் விளக்குகிறார்.

இந்த அணுகுமுறையை ஆதரிக்க ஏற்கனவே சில ஆரம்பகட்ட சான்றுகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள டானா-ஃபார்பர் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு வகை சிறுநீரக புற்றுநோய் உள்ள ஒன்பது பேருக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கினர். அவர்களின் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பிறகு, உடலில் எஞ்சியிருக்கும் புற்றுநோய் செல்களை அகற்ற நோயாளிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

2025-இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், ஒன்பது நோயாளிகளும் இலக்கு வைக்கப்பட்ட புற்றுநோய் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தொடங்கினர் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பல ஆண்டுகளாகப் புற்றுநோயின்றி இருந்தனர் என்று அந்தக் குழு தெரிவித்தது. தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகள் மெலனோமா (தோல் புற்றுநோய்) சிகிச்சையிலும் நம்பிக்கையை அளித்துள்ளன.

"இது ஒரு தைரியமான புதிய உலகம்," என்று நுட்சன் கூறுகிறார். "இது துல்லியமான மருத்துவத்திற்கான (precision medicine) இலக்கணம். உங்களுக்கு இருக்கும் அதே வகை கட்டிக்கு எதிரான தடுப்பூசி உத்திகளை நாம் இப்போது மிக விரைவாக உருவாக்க முடியும்."

இந்த உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும், கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது.

ஆராய்ச்சியில் உள்ள சில ஊக்கமளிக்கும் முறைகளை உறுதிப்படுத்தவும், மருத்துவர்கள் நோயாளிகளின் குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும் சிகிச்சைகளைத் துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் பொருத்தக்கூடிய எதிர்காலத்தை அடையவும் இன்னும் பல ஆய்வுகள் தேவை. "ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தாண்டி முன்னேறாத பல நம்பிக்கைக்குரிய இலக்குகளும் புதிய மருந்துகளும் இருந்துள்ளன," என்று டெமரியா எச்சரிக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட பிரிவு நோயாளிகள் எந்த வகையான இம்யூனோதெரபிக்கும் பலன் அளிக்காமல் போக வாய்ப்புள்ளது என்று டயஸ் கூறுகிறார். புற்றுநோய்கள் வளர்வதற்கும் செழிப்பதற்கும் வெவ்வேறு "தனித்துவமான ஆற்றல்களை" கொண்டுள்ளன, மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் சிலவற்றிற்கு மட்டுமே சிறந்த எதிரியாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

ஆனால் பலன் அளிக்கும் நோயாளிகளுக்கு, இம்யூனோதெரபி ஏற்கனவே உயிரைக் காப்பதாகவும் வாழ்க்கையை மாற்றுவதாகவும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

டயஸின் சோதனையில் பங்கேற்ற நியூயார்க் நோயாளி சிடெரிஸ், புற்றுநோயியல் துறையின் பிரகாசமான எதிர்காலத்தின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்கிறார். "நாங்கள் ஒரு சிறந்த திசையில் செல்கிறோம்," என்று அவர் கூறுகிறார். "10 ஆண்டுகளுக்குள், எந்த வகையான கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையும் இரத்தத்தை வெளியேற்றும் பழைய கால சிகிச்சை முறை போல மிகப்பழமையானதாக மாறிவிடும் என்று மருத்துவர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு