
மக்களவைத் தொகுதி மறுவரையறை
மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிப்பது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?
கடந்த ஐந்தரை தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள் தொகை 1971-இல் 54 கோடியாக இருந்ததிலிருந்து 2026-இல் தோராயமாக 142 கோடியாக உயர்ந்துள்ளது. இது 163% சதவீத வளர்ச்சியாகும்.
ஆனால், மக்களவையின் அளவு பெரிய அளவில் மாற்றமின்றி அப்படியே உள்ளது. 1977-ஆம் ஆண்டு முதல், 1987-இல் கோவா மற்றும் டமன் மற்றும் டியூ பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரே ஒரு இடம் மட்டுமே சேர்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தற்போதுள்ள 543 ஆக உயர்ந்தது.
மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மசோதா ஒன்றை அரசு தற்போது முன்மொழிந்துள்ளது, இது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள அரசியலமைப்பு வரம்பு 550 இடங்களாகும்; அரசியலமைப்பு (நூற்று முப்பத்தியோராவது திருத்தம்) மசோதா இந்த வரம்பை 850 ஆக உயர்த்த முன்மொழிகிறது.
மேலும், இது பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் முயல்கிறது. செப்டம்பர் 2023-இல் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' அல்லது 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம்', மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்குகிறது

இங்குள்ள ஒவ்வொரு சதுரமும் மக்களவையின் ஓர் இடத்தைக் குறிக்கிறது. தற்போதுள்ள 543 இடங்கள் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன.

அரசு தற்போது மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் என வரம்பு நிர்ணயிக்கப்படும். மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள மற்றொரு மசோதாவான ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’, மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை இடங்களை ஒதுக்குவது, எல்லைகளை மறுசீரமைப்பது மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடங்களை ஒதுக்குவது ஆகிய பணிகளுக்காக ஒரு ஆணையத்தை அமைக்க வழிவகை செய்கிறது.
இந்த இடஒதுக்கீட்டிற்கான சூத்திரம் குறித்து மசோதாக்களில் தெளிவு இல்லை என்றாலும், இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன:
-மக்களவை விரிவாக்கத்தின் போது மாநிலங்கள் தற்போது கொண்டுள்ள இடங்களின் சதவீதத்தையேத் தொடர்ந்து பராமரித்தல்
-மக்கள் தொகை புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி விகிதாசார அடிப்படையில் இடங்களை அதிகரித்தல் ஆணையத்தால் கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது, இதன் மூலம் 2011-ஆம் ஆண்டின் தரவுகள் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது 80 இடங்கள் உள்ளன - இது மக்களவையில் உள்ள 543 இடங்களில் 14.7% பங்காகும். 850 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் இந்த 14.7% பங்கு அப்படியே தக்கவைக்கப்பட்டால், உத்தரப் பிரதேசத்திற்கு 124 இடங்கள் கிடைக்கும். ஒருவேளை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி இடங்கள் ஒதுக்கப்பட்டால், அந்த மாநிலத்தின் இடங்களின் எண்ணிக்கை 138-ஆக உயரும்.
அதேபோல், தற்போது மக்களவையில் 20 இடங்களைக் கொண்டுள்ள கேரளா, தற்போதைய விகிதாச்சாரம் தக்கவைக்கப்பட்டால் அதன் எண்ணிக்கை 31-ஆக உயரும். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டால், அதன் எண்ணிக்கை 23-ஆக மட்டுமே சிறிய அளவில் உயரும்.
2011-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டால், ஐந்து தென்னிந்திய மாநிலங்களின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 173-ஆக உயரும், அதாவது 44 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்; அதேவேளையில் அதிக மக்கள் தொகை வளர்ச்சியைக் கொண்ட நான்கு மாநிலங்களின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 307-ஆக உயரும் - இது 133 இடங்கள் உயர்வாகும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், " தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தமிழ்நாட்டிற்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் ஒரு 'மிகப்பெரிய வரலாற்று அநீதி'!" என்று கூறியுள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பிரதமருக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், தேசியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய போதிலும் நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரல் நசுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் வட-மத்திய மண்டலத்தில் அதிக மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட மாநிலங்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாகப் பயனடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பங்களிப்பில் மாநிலங்களின் செயல்பாட்டைக் கருத்தில் கொள்ளும் இட ஒதுக்கீட்டிற்கான மாற்று சூத்திரம் ஒன்றையும் ரெட்டி முன்மொழிந்துள்ளார்.
மக்களவை இடங்களை ஏன் மறுசீரமைக்க வேண்டும்?
கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 2.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ள போதிலும், இந்த வளர்ச்சி அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக இல்லை.
ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில், 1971 மற்றும் 2027-க்கு இடையில் மக்கள் தொகை சுமார் 190% முதல் 220%-க்கும் மேல் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை மதிப்பீடுகள், மக்கள் தொகை முன்னறிவிப்பு குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.
இதற்கு நேர்மாறாக, கேரளாவின் மக்கள் தொகை வெறும் 70% மட்டுமே வளரும், தமிழ்நாட்டில் இது 88% ஆக இருக்கும். கர்நாடகா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை வளர்ச்சி முறையே 137% மற்றும் 113% என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தென் மாநிலங்களிலும், கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட மிகக் குறைவாகவே இருந்துள்ளது. இந்தச் சீரற்ற வளர்ச்சியின் விளைவு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.
ராஜஸ்தானில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சராசரியாக 33 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இது கத்தார் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம்! இதற்கு மாறாக, கேரளாவைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதில் பாதியளவு, அதாவது 18 லட்சம் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை (லட்சத்தில்

1977-ஆம் ஆண்டு ஆறாவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, அனைத்து முக்கிய மாநிலங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரியாக சுமார் 10.44 லட்சம் குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
மக்களவையின் பலம் 543 இடங்களாகவே நீடித்தால், 2027-ஆம் ஆண்டிற்குள் உத்தரப் பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தோராயமாக 30 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். இது கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொகையை விட மிக அதிகமாகும்.
850 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தற்போதைய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் மறுபகிர்வு செய்யப்பட்டாலும், இந்தச் சமநிலையின்மை நீங்காது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடு அப்படியே இருக்கும். கேரளாவில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சுமார் 11.7 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு ஒப்பிடுகையில், உத்தரப் பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் சுமார் 19.7 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவே இருப்பார்.
மாநிலங்களுக்கு இடையே தொகுதி மக்கள் தொகையில் அதிகரித்து வரும் இந்த வேறுபாடு, இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு அரசியல் சவாலாகும். இது 1970-களுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டதன் விளைவாகும்.
எளிமையான சொற்களில் கூறுவதானால், தொகுதி மறுவரையறை என்பது எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு செயல்முறையாகும். மக்கள் தொகை மாற்றங்களைக் கருத்தில் கொள்வதற்காக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு இது நடத்தப்பட வேண்டும். மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்வதும், அதன் மூலம் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அல்லது பிரதிநிதியும் தோராயமாக சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதுமே இதன் நோக்கமாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின் (Articles) மூலம் இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 81-வது பிரிவு, நடைமுறைக்குச் சாத்தியமான வரை அனைத்து மாநிலங்களுக்கும் இடங்கள் மற்றும் மக்கள் தொகை இடையிலான விகிதம் சமமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் மக்களவை இடங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று 82-வது பிரிவு கூறுகிறது.
இருப்பினும், எல்லைகளை மறுசீரமைக்கும் இந்த நடைமுறை 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் கிடைக்கும் வரை இந்தத் தடை அமலில் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகை வளர்ச்சியை நிலைப்படுத்துவதற்கு அவகாசம் அளிப்பதே இதன் பின்னணியில் இருந்த தர்க்கமாகும்.
2002-ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் 84-வது திருத்தம், "மக்கள் தொகை நிலைப்படுத்தலைத் தொடர மாநிலங்களை ஊக்குவிப்பதற்காக" தொகுதி மறுவரையறை மீதான தடையை 2026 வரை நீட்டித்தது. இதன் பொருள், 2026-க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை ஒத்திவைக்கப்படும் என்பதாகும்.
இருப்பினும், "தொடர்புடைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்" அடிப்படையில் அல்லது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்த இந்த மசோதா முன்மொழிகிறது.
2021-இல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 2025 ஜூன் மாதத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இல் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
தொகுதி மறுவரையறை நடவடிக்கை இல்லாததும், காலப்போக்கில் மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரும் மாறுபாடுகளும், இந்தியாவில் சில மாநிலங்கள் தற்போது குறைவான பிரதிநிதித்துவத்தையும், மற்றவை அதிகப்படியான பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருப்பதை உணர்த்துகின்றன.
தொகுதி மறுவரையறை குறித்து 2004ஆம் ஆண்டு தி ஜர்னல் ஆஃப் ஏசியன் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ் இதழுக்கு எழுதிய தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையில் பங்கஜ் படேல் மற்றும் டி.வி. சேகர் கூறுவது போல, "இந்தச் செழிப்பான மாநிலங்கள், குறிப்பாகத் தென்னிந்தியாவில் உள்ளவை, வலுவான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் உயர் கல்வி நிலைகளால் பயனடைந்துள்ளன, இது மெதுவான மக்கள் தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, அவை இப்போது தங்களின் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப கூடுதலான நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளன, இது அவற்றை அரசியல் ரீதியாக அதிகப் பிரதிநிதித்துவம் கொண்டவையாக மாற்றியுள்ளது."
அதே நேரத்தில், அதிக மகப்பேறு விகிதங்களைக் கொண்ட வட மாநிலங்கள் குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன, அதாவது அவை தங்கள் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப மிகக் குறைந்த இடங்களையே கொண்டுள்ளன.
மக்களவையில் அதிகப்படியான மற்றும் குறைவான பிரதிநிதித்துவம்

மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டிய இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த நான்கு மாநிலங்களும் 31 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளன; இதில் உத்தரப் பிரதேசம் மட்டும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியதை விட 11 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டிய இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஐந்து மாநிலங்களும் 26 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளன; இதில் தமிழ்நாடு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியதை விட 10 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
இதன் விளைவாக, மக்களவையின் 543 இடங்கள் மறுசீரமைக்கப்பட்டிருந்தால், தென் மாநிலங்கள் வேகமான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களிடம் தங்கள் இடங்களை இழந்திருக்கும்.
இந்தக் காரணத்தினாலேயே, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியதற்காகத் தங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதாகத் தென் மாநிலங்களின் முதல்வர்கள் முன்பு கூறியிருந்தனர்.
தொகுதி மறுவரையறை குறித்த கூட்டுக் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், அதன் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறுகையில், "இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. இந்த நடவடிக்கை அத்தகைய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும். மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், எங்களது குரல் நசுக்கப்படும்," என்றார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மற்றொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஸ்டாலின் கூறுகையில், "நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டமைப்புக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் விகிதாசாரப்படி உயர வேண்டும்... மொத்த இடங்களில் தமிழ்நாட்டின் தற்போதைய இடங்களின் சதவீதமான 7.18 சதவீதம், எந்தச் சூழ்நிலையிலும் குறைக்கப்படக் கூடாது," எனத் தெரிவித்தார்.


மக்களவையில் 850 எம்.பி.க்கள்' - புதிய மசோதாவுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும்?
தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் என்ன?