இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தனது பொறுப்பில் எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு இரான் தற்போது பதிலளித்துள்ளது.
இரானியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கும் அனுப்பப்படாது என்று இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.
பிபிசி பாரசீக சேவையின் தகவலின்படி, "இரானின் செறிவூட்டப்பட்ட உலோகத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவது என்பது ஒருபோதும் பரிசீலிக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக இருந்ததில்லை," என்று பாகாய் திட்டவட்டமாகக் கூறினார்.
இஸ்மாயில் பாகாய் மேலும் கூறுகையில், "ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை, இரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த முற்றுகை தொடருமானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்படக்கூடும். ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இரான் நிச்சயமாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றார்.
ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை தொடரும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது இரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறுகையில், "இரானுடனான நமது ஒப்பந்தம் 100 சதவிகிதம் முழுமையடையும் வரை, இந்த நடவடிக்கை இரானுக்கு மட்டுமே பொருந்தும்," என்றார்.
’நல்ல செய்தி கிடைத்துள்ளது’ - இரான் குறித்து டிரம்ப் கருத்து
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு செய்தியைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரானுடனான சூழல் மேம்பட்டு வருவதாகத் தெரிவதாக அவர் கூறினார்.
அந்தச் சிறந்த செய்தி என்னவென்று செய்தியாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, "அது குறித்து நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்; அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். இவற்றில் பல விஷயங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன," என்று டிரம்ப் பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது," என்றார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், இரானுடனான போர்நிறுத்தத்தை ரத்து செய்துவிடுவோம் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
இரான் - அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் புதிய தகவல்
பட மூலாதாரம், Osmancan Gurdogan/Anadolu via Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்
இரான் மற்றும் அமெரிக்கா இடையே சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா தூதரக மன்றத்தில் பேசிய இஷாக் தார், "இரு தரப்பினருக்கும் இடையில் சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, மேலும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், ஏனெனில் அது ஒட்டுமொத்த உலகுக்கும் பயனளிக்கும்" என்று கூறினார்.
பிபிசி உருதுவின்படி, இஷாக் தார், "நிலுவையில் உள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை எட்டவும், கருத்து வேறுபாடுகளைக் களையவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். லெபனானில் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது, இப்போது ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இரான் எந்த நிபந்தனைகளும் இன்றி கப்பல்களுக்காக ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறந்துள்ளது" என்று கூறினார்.
இஷாக் தார் மேலும் கூறுகையில், "மீதமுள்ள பேச்சுவார்த்தைகளும் நிறைவு செய்யப்படும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றன.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 18) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி - ஸ்டாலின் கூறியது என்ன?
வால்பாறையில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலி
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வேனில் பயணம் செய்த 16 நபர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தெரிவித்தார்.
லெபனானில் போர் நிறுத்தம் பற்றி இரான் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
லெபனானில் போர் நிறுத்தத்தை இரான் வரவேற்றுள்ளதுடன், இது ஒரு ராஜீய வெற்றி என்றும் ஹெஸ்பொலாவின் "எதிர்ப்பின்" விளைவு என்றும் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒரு பரந்த புரிந்துணர்வின் ஒரு பகுதியாகவே இந்த போர் நிறுத்தம் இருப்பதாக இரான் கருதுகிறது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.
பிராந்தியம் முழுவதும் ஒரு விரிவான போர் நிறுத்தத்திற்கு இரான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
லெபனானில் போர் நிறுத்தத்தை வரவேற்ற மக்ரோங் விடுத்த வேண்டுகோள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பிரெஞ்சு அதிபர் மக்ரோங் லெபனானில் பத்து நாள் போர் நிறுத்தத்தை ஆதரித்திருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"ராணுவ நடவடிக்கைகள் தொடர்வது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்த போர் நிறுத்தத்தை மேலும் சீர்குலைத்துவிடும் என்ற எனது கவலையையும் நான் வெளிப்படுத்துகிறேன்," என்று மக்ரோங் கூறினார்.
''லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையின் இருபுறமும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஹெஸ்போலா தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இஸ்ரேல் லெபனானின் இறையாண்மையை மதித்து, போரை நிறுத்த வேண்டும்.'' எனவும் அவர் கூறினார்.
”ராகுல் காந்தி பரப்புரையில் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்” - ஆர்.எஸ். பாரதி
பட மூலாதாரம், @SRINIVASIYC
படக்குறிப்பு, ராகுல் காந்தி (கோப்புப்படம்)
தமிழகத்திற்கு நாளை (ஏப்ரல் 18) வருகை தருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. அவர் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் திருச்சி துறையூர் ஆகிய தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பரப்புரை 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழக வரவுள்ளார். ஆனால், அவருடைய பரப்புரையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பரப்புரையில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “முதலமைச்சரின் பரப்புரை ஏற்கெனவே திட்டமிடப்பட்டுவிட்டது. அதை மாற்ற முடியாது. ராகுலின் பரப்புரையில் திமுக சார்பில் கலந்துகொள்வோம். ஆனால், முதலமைச்சர் கலந்துகொள்ள மாட்டார். அவருடைய பரப்புரை திட்டத்தை மாற்றியமைத்தால், 30-40 தொகுதிகளில் பரப்புரை பாதிக்கப்படும்” என்றார்.
ராகுல் காந்தி தமிழகத்துக்கு பரப்புரைக்காக வரமாட்டார் என, முன்னதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராகுலின் வருகையால் “அண்ணாமலை கூறியது பொய்” என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
லெபனானில் போர்நிறுத்த அறிவிப்புக்கு கத்தார் வரவேற்பு
பட மூலாதாரம், Reuters
லெபனானில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை கத்தார் வரவேற்றுள்ளதுடன், இது பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு படி என்றும் விவரித்துள்ளது.
கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவில், "பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கும் மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இந்த ஒப்பந்தம் முழுமையாகவும் உடனடியாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அது, "இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்குப் பங்களித்த நண்பரானஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது" என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ஒரு பதிவின் மூலம் அறிவித்திருந்தார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
தெற்கு லெபனானில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா, இஸ்ரேலுடன் செயல்படுத்தியுள்ள போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
”எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில்” - தொகுதி மறுவரையறை குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை
பட மூலாதாரம், FACEBOOK
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.
நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், தங்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் ”கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன” என்றும் “பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக” இந்தச் சட்டமுன்வடிவு இருப்பதாகவும் ஸ்டாலின் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பேயி அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பானவை.
தற்போதுள்ள 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நடந்தது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
மகளிருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் மற்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது 'சாண்ட்விச்' போல இருப்பதாக கூறிய திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவால் வட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற தென்மாநிலங்களின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்று விளக்கமளித்தார்.
அவற்றின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ளது. மேலும், இம்மசோதாக்கள் மீது வாக்கெடுப்புகளும் நடைபெற உள்ளன.
இரான் போர் "மிக விரைவில் முடிவுக்கு வரும்" - டிரம்ப்
பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நெவாடாவில் நடைபெற்ற வரி நாள் வட்டமேசை மாநாட்டில் இரான் போர் குறித்தும் பேசினார். இரான் போர் "மிக விரைவில் முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.
"இரானில் போர் விவகாரம் நன்றாக முன்னேறி வருகிறது என்று நான் கூறுவேன்," என்று கூறிய அவர், அது "மிக விரைவில் முடிவுக்கு வரும்" என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, இரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தான் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும். பாகிஸ்தானில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானால், நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும்," என்று கூறினார்.
கடந்த வாரம், அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த விவாதங்கள் "தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றும், ஆனால் அதற்கான நேரமோ இடமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டும் லெபனான்
பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் பலமுறை மீறப்பட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் உள்ள தனது அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், லெபனான் கிராமங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் தரப்பிலிருந்து பலமுறை இடைவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் லெபனான் ராணுவம் கூறியுள்ளது.
தெற்கு நகரங்களுக்குத் திரும்பும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும், அபாயகரமான பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் இடம்பெயர்ந்த மக்களை ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதல்களால் லெபனானில் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் போர்நிறுத்தத்துக்குப் பிறகு, லெபனானில் உள்ள பலரும் கொண்டாடினர்.
லெபனானில் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, ஐ.நா அகதிகள் தலைவர் சர்வதேச சமூகத்திடம் "அவசர உதவி" கோரியுள்ளார்.
இந்தச் செய்தி எழுதப்படும் வரை, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேலிடமிருந்தோ அல்லது அதன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளிடமிருந்தோ (IDF) எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், லெபனானுடனான ஒப்பந்தத்துக்குப் பிறகு, ஹெஸ்பொலாவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மட்டுமே ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது.
"இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்" - டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
போர் நிறுத்தத்தை அறிவிக்கும் தனது பதிவில், லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், TRUTH SOCIAL
இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து போரிட்டு வரும், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா பற்றி அவர் தன் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.
பின்னர், ட்ரூத் சோஷியல் தளத்தில் மற்றொரு பதிவில், டிரம்ப், "இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை நான் வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன். இது 1983-க்குப் பிறகு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான முதல் அர்த்தமுள்ள உரையாடலாக இருக்கும், இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இரு தரப்பினரும் அமைதியை விரும்புகிறார்கள், இது விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை வரவேற்ற லெபனான் பிரதமர்
இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் வரவேற்றார். போர் தொடங்கியதிலிருந்தே லெபனான் இந்த ஒப்பந்தத்தைக் கோரி வந்ததாக அவர் கூறினார்.
"இந்த ஒப்பந்தம், மோதலால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.
போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் பிரதமர் சலாம் பாராட்டினார்.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 17) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
'தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது' - அமித் ஷா
ராக்கெட் ஏவிய ஹெஸ்பொலா - லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல்
பட மூலாதாரம், Reuters
தெற்கு லெபனானில், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேவேளை, ஹெஸ்பொலா இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியதாக தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில், உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் முழுமையாக சேதமடைந்து வருகின்றன.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
தேர்தல் பிரசாரத்திற்காக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.
இதனை தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின்,"தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கும் மசோதாவின் நகலை எரித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இரானுடன் பேச்சுவார்த்தை - பாகிஸ்தானின் பங்கு பற்றி வெள்ளை மாளிகை கூறியது என்ன?
பட மூலாதாரம், Reuters
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான அவர்களின் நட்பையும் முயற்சிகளையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்," என்று அவர் கூறினார்.
"பாகிஸ்தானியர்கள் மூலம் இந்த உரையாடலை சுமூகமாகத் தொடர்வது முக்கியம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்," என்று லெவிட் கூறினார்.
இரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தன, அதன் பிறகு அமெரிக்கா இரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டது.
வளைகுடா பிராந்தியம், பாகிஸ்தான் மற்றும் இரான் அதிகாரிகள், அமெரிக்க மற்றும் இரானிய குழுக்கள் இந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக்காக திரும்பக்கூடும் என்று கூறியுள்ளனர், இருப்பினும் அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.