"கழுத்து நெரிக்கப்பட்டது" - மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி உரை
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கான முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தம் நிறைவேறாதது குறித்து பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமையன்று வருத்தம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வாய்ப்பு நழுவிவிட்டதாக அவர் இதனை விவரித்தார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் "தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம்" நேரடியாகப் பேசுவதற்காகவே தான் முன்வந்திருப்பதாக பிரதமர் கூறினார். அவர்களின் எதிர்பார்ப்புகளையும், இந்தத் பின்னடைவால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
"எங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எங்களால் வெற்றிபெற முடியவில்லை," என்று கூறிய அவர், நாட்டின் பெண்களுக்குத் தனது "மனமார்ந்த வருத்தத்தைத்" தெரிவித்தார். முன்மொழியப்பட்ட "நாரி சக்தி வந்தன் சட்டத்திருத்தம்" (பெண்கள் சக்தி வணக்கத் திருத்தம்), மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று மோதி வலியுறுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தச் சட்டத்திருத்தம் 2029 மக்களவைத் தேர்தல்களில் தொடங்கி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வலுவான குரலை வழங்குவதன் மூலம், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது.
எனினும், இந்தச் சட்டத்திருத்தத்தைத் தடுத்த எதிர்க்கட்சிகளை மோதி கடுமையாக விமர்சித்தார்; அவர்கள் தேசிய நலனை விட அரசியல் நலன்களுக்கே முன்னுரிமை அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் , அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளை குறிப்பிட்ட அவர், அவர்களின் எதிர்ப்பு இறுதியில் பெண்களின் நலன்களையே பாதித்ததாகக் குற்றம் சாட்டினார்.
"நாட்டின் நலனை விடக் கட்சி நலன்களே முதன்மையானதாக மாறும்போது, பாதிக்கப்படுவது நாடே ஆகும்—குறிப்பாக, பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார். “இந்த நேர்மையான முயற்சிக்குக் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்த தேசத்தின் கண் முன்னாலேயே, அது வடிவம் பெறுவதற்கு முன்பாகவே அதனைச் செயலளவில் கழுத்தை நெரித்துவிட்டன,” என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.
இந்த பின்னடைவு ஏற்பட்டபோதிலும், பெண்களின் அதிகாரமளித்தலே இந்தியாவின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தூண் என்று வர்ணித்த பிரதமர், அத்துறையில் தனது அரசாங்கத்திற்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.